>> Thursday, June 11, 2009


வட போச்சே....!
நிருபன்னா பரபரன்னு திரியணும்கிறது நிஜம்தான். பரபரப்பைத் தாண்டி நிதானம் வேணும்னு சமீபத்துல நடந்த சம்பவம் ஒண்ணு மூலம் தெரிஞ்சுக்கிட்டேன். கேட்டுட்டு அவசரக்குடுக்கைனு நீங்க திட்டுனாலும் பரவாயில்லை. சொல்லியே தீரணும்கிறது என்னோட கட்டாயம்! நடந்ததை அப்படியே சொல்லிடுறேன். புலனாய்வு செய்திகளென்றால் எனக்கு சிக்கன் புலாவ் சாப்பிட்ட மாதிரி. ஆவி உலக அனுபவங்கள், மண்டையோட்டுச்சாமி, சுருட்டுச்சாமி, சொக்கலால் பீடிச்சாமி என்று நான் தேடியலைந்த பரபரப்பில் நடந்த காமெடிக்கூத்து இது. கல்லூரிகால நண்பனின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் ரெண்டுவிட்ட (என்ன கண்றாவி இது!) அண்ணன் ஒருவர் சொன்ன சேதி இது. ‘ஏனுங்க தம்பி.. எங்க ராமநாதபுரத்தில ஒரு அம்மாவுக்கு மாகாளி அம்மன் வந்து நாடாளுமன்ற எலெக்ஷ‌ன்ல யார்யாரெல்லாம் ஜெயிக்கப்போறாங்கன்னெல்லாம் சொல்லுது! ஒர் எட்டு பாத்துப்போட்டு போங்க..அந்தப்பாட்டியோட நம்பரை எஸ்.எம்.எஸ் பண்றேன்’னு சொல்ல.. மண்டைக்குள் மகுடி ஊதி அடுத்த செகண்ட் அஸைன்மெண்ட் ஓ.கே வாங்கி தட்கல்லில் ராமநாதபுரத்துக்கு டிக்கெட் புக் பண்ணினேன். இடைப்பட்ட நேரத்தில் அங்கே இருந்த ஜோல்னாப்பை முன்னாள் நிருப நண்பனிடம் சொல்லி ரூம் போடச் சொன்னேன் ( ‘மறக்காமல் ஏ.சி இருக்கணும் நண்பா! சென்னையில ஆபிஸ்பூரா ஏ.ஸில இருந்து பழகிருச்சு உடம்பு!’ ) பாட்டியை அழைத்தேன். நான் ரிங் செய்த அடுத்த செகண்டே அட்டெண்ட் பண்ணியது மறுமுனை. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், ‘நாளைக்கே கிளம்பி வாங்க தம்பி. ராமநாதபுரத்துல என்னைத் தெரியாத ஆளுங்களே கிடையாது. இங்கே வந்ததும் கால் பண்ணுங்க.. நான் செப்பேதி நீக்கு அர்த்தமையுந்தா? ’ என்று மட்டும் சொல்லிவிட்டு கட் பண்ணியது மறுமுனை. (அட சுந்தரத் தெலுங்கு!)
 5.30-க்கு ரயில் கிளம்புவதற்குள் இருப்புக் கொள்ளவில்லை எனக்கு. ‘ராமநாதபுரத்தில கருவாடு ஃபேமஸாமே... நெய் மீன் நெத்திலி மீன் கருவாடுன்னா எனக்கு உசுரு. அப்புறம் அடிக்குற வெயிலுக்கு அஸைன்மெண்ட் முடிஞ்சதும் ஒரு கூறாவது வாங்கியாறணும். அங்கே நம்ம லோக்கல் நிருபனுக்கு காப்புக் கட்டி அவன் செலவுல பால்கொடம் தூக்கிற வேண்டியதுதான். தீவுக்கு போய் கிங் ஃபிஸர்ல குளிச்சா என்ன சுகமா இருக்கும்! கைப்புள்ள... பைக்கைக் கிளப்பு!’ என மைண்ட் வாய்ஸ் உச்சஸ்தாயியில் கேட்க, அடுத்த செகண்ட் எழும்பூரில் நின்றது என் பைக்.
லோயர் பெர்த்தில் சீட் கிடைத்த சந்தோஷத்தில் ஜே.கே ரித்தீஷைவிட குஷியானேன். எட்டரை மணிக்கே விழுப்புரத்தில் வெஜ் சாப்பாட்டோடு கெட்டித்தயிர் ரெண்டு டப்பாக்கள் வாங்கி கவிழ்க்க.. பத்துமணிக்கு செம தூக்கம்! யாரோ ஒரு புண்ணியவானின் எழுப்பலில் 3.45 மணிக்கு நான் ராமநாதபுரத்தில் நின்றேன். ஆட்டோக்காரருக்கு பேரம் பேசாமல் 60 ரூபாயை கொடுத்து நண்பன் உபயத்தில் கம்பிளித் தூக்கம் போட்டுவிட்டு விழித்தால் மணி 9!
‘அட! டைம் போனதே தெரியலையே! சூப்பர் மச்சி!’ மனசுக்குள் மானசீகமாக அந்த ஜோல்னாவை நினைத்துக் கொண்டு மொபைலில் அந்த பாட்டியின் நம்பரை தேடிப்பிடித்து கால் செய்தேன். அது ஒரு வித்தியாசமான தெலுங்கு பாட்டை என் காதுக்கு தாரை வார்த்தது. அநேகமாக அம்மன் பாட்டாக இருக்கும். பாட்டி என் அழைப்பை அட்டெண்ட் செய்யவில்லை. லோக்கல் நிருப நண்பன் பவ்யமாக வந்து நின்று டிபனுக்கு அழைத்தான். ‘நண்பா! உங்க எழுத்துல சமீபகாலமா ஒரு ஃபயர் தெரியுது.’
‘ஓ தேங்க்ஸ்!’ ( அது டெஸ்க்கில் என் எழுத்துக்களோடு லோல்படும் சோடாப்புட்டி ஒருத்தனின் கைங்கர்யம் என்று சொல்ல மனசு வரவில்லை எனக்கு!)
‘ஆமா... ஆசிரியர்கூட ஸ்பெஷலா என்னைப் பாராட்டினார்.’&பொய் சொன்னேன். (ஆசிரியர் கேபினுக்குள் இதுவரை அடியேன் போனதில்லை. ஆசிரியரின் குரலை யாமறியேன் பராபரமே!)
அவனுடன் கால் டாக்ஸிக்குள் என்னைத் திணித்துக் கொண்டேன். அவன் இன்னும் என்னை வரம் கொடுக்க வந்த தேவதூதன் போலவே மையமாக பார்த்துக் கொண்டிருந்தான். (ஏரியா ரிப்போர்ட்டர்களே இப்படித்தான். பாவம் என்ன செய்ய?)
‘சார்! நீங்க இந்த தடவை எந்த ஆவியைப் பிடிக்க வந்துருக்கீங்க?’
‘அப்படின்னு எந்த வெண்ணெய் வெட்டி உங்ககிட்டே சொன்னான் பிரதர்?’ -
பயல் சப்தநாடிகள் ஒடுங்கிப்போய் அமைதியாகிவிட்டான்.
‘சும்மா சொல்லுங்க சார் ராமநாதபுரத்துல என்ன விசேஷம்?’
‘பிரதர்.. இப்ப நாம ஸ்பாட்டுக்குத்தான் போறோம். செம கலக்கல் நியூஸ். நாளைக்கு நான் சேதுல கிளம்புன பிறகு அந்த அதிர்ச்சியை நீங்க ஃபீல் பண்ணுவீங்க. ப்ளீஸ் ஸ்பாட்டுக்கு போற வரைக்கும் அமைதியா இருங்க!’ என்றேன் சஸ்பென்ஸை உடைக்க மனமில்லாமல்!
பயலின் முகம் வெளிறிப்போனதை மிர்ரரில் பார்த்தேன்.
பாட்டியின் ஞாபகம் வர.. கால் செய்தேன். நல்லவேளை முதல் அழைப்பில் எடுத்துவிட்டாள்.
‘பாட்டி இப்ப நாங்க அங்கேதான் கிளம்பி வந்துட்டு இருக்கோம். அட்ரஸ் சொல்லுங்க.. என்னது.. மணிக்கூண்டா? ஓ.. மணிக்கூண்டுக்கு பக்கத்திலயா?... கோணியம்மன் கோவிலா.. டவுன் ஹால் கிட்டேயா?.. தோ வந்துர்றோம். நானும் உங்க ஊரு நண்பர் ஒருவரும் வர்றோம்... வச்சிடுறேன்!’ என்றேன்.
ஏரியா பார்ட்டி, ‘மணிக்கூண்டு ராமநாதபுரத்தில இல்லை சார்.. அது சென்ட்ரல் கிளாக்க்கா இருக்கும்!’ என்றான்.
அடுத்த செகண்ட் டிரைவரைவிட்டு அட்ரஸ் விசாரிக்க சொன்னேன். அவன் பத்து நிமிடங்கள் அழைந்து முகம் வெளிறிப்போய் வந்தான்.
‘சார் அப்படி ஒரு கோவிலே ராமநாதபுரத்தில இல்லையாம்... கீழக்கரை பக்கத்தில கூனியம்மன்னு ஒரு கோவில் இருக்காம்!’ என்றான். ஏரியா பார்ட்டியும் ஆமோதிப்பது போல் தலையாட்டினான்.
‘என்ன பிரத்ர்! ஏரியால இருக்குறீங்க.. ஒரு ஏரியாகூட தெரிஞ்சுக்குறாம இருக்கீங்க.. என்னமோ போங்க. மெட்ராஸ்ல எங்கூட வந்து பாருஙக. மூலை முடுக்கெல்லாம் எனக்கு அத்துப்படி!’ என்றேன்.
பயல் அமைதியாய் என் மொபைலை வாங்கி பாட்டியிடம் பேசினான். ‘என்னது டவுன் ஹாலா? அதுக்கு பக்கத்தில மணிக்கூண்டா? பக்கத்துலேயே கோணியம்மன் கோவிலா? நாங்க நீங்க சொல்லுற மணிக்கூண்டு கிட்டேதான் இருக்கோம். ஆனா மணிக்கூண்டுகிட்டே மார்க்கெட் மட்டும்தான் இருக்கு!’ என்றான். ஏதேதோ பாட்டியிடம் ரூட் கேட்டவன் லேசாக முகம் வெளிறி என்னைப் பார்த்துக் கொண்டே ‘ஓகே பாட்டி.. இந்த அட்ரஸ் போதும்.’ என்றபடி கட் செய்து மொபைலை என்னிடம் தந்தான்.
‘சார் பாட்டிகிட்டே நீங்களே இனிமே பேசுங்க. அதுக்கு முன்னாடி கோயமுத்தூர்ல இன்னொரு ராமநாதபுரம் இருக்கு. அதை முதல்ல தெரிஞ்சுக்கங்க!.. டிரைவர் வண்டியை நிறுத்துப்பா!’ என்றபடி கோபமாக இறங்கிப் போனான். நான் அவசரஅவசரமாக பாட்டிக்கு டயல் செய்தேன்.
‘பாட்டி! அது கோயமுத்தூர் ராமநாதபுரமா? அப்படியா.. நான் இப்போ மதுரை ராமநாதபுரத்துல நிக்குறேன்! சாரி பாட்டி இன்னிக்கு என்னால வரமுடியாது!’ என்றபடி பெருகி வழிந்த வியர்வையைத் துடைத்தபடி டிரைவரைப் பார்த்தேன். அவன் தலையில் அடித்துக் கொண்டு என்னைப்பார்த்து சிரித்தான்.
பின்குறிப்பு: இதில் நான் என்பது நான் அல்ல.. அந்த அப்பாவி நிருபன்தான் நான்! சுற்றமும்  அதன் பின்னணியும் அலசி ஆராய்ந்தால் சம்மந்தப்பட்ட அந்த நண்பர் யார் என்று தெரியும். ஹிஹி ஹிஹி...!

Read more...

>> Friday, May 29, 2009

சினிமாவுக்கு கோடம்பாக்கம்...சிவில் சர்வீஸுக்கு அண்ணா நகர்!

சினிமாவுக்கு கோடம்பாக்கம் போல இப்போ சிவில் சர்வீஸ் எனப்படும் மத்திய அரசின் தேர்வாணைக்குழு நடத்தும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுக்கு அண்ணாநகர் என்றாகிவிட்டது!




வருடா வருடம் மே மாதம் முதல் வாரத்தில் எப்போதும் அண்ணாநகரின் ஒவ்வொரு அவென்யூவும் பிஸியாகிவிடும்.  டீக்கடையில் ‘மச்சான் இந்த டைம் பர்வீன் தல்ஹா சொதப்பி எடுத்துட்டாங்க. போன தடவை நல்ல கொஸ்டீன்ஸ் கேட்டாங்க. ..வீட்டுல சண்டையோ என்னமோ’... ‘மாப்ளே! ராய்பால்  இந்த தடவை ரொம்ப லிபரல்... ஜோக்கெல்லாம் அடிச்சுக்கிட்டே கேள்வி கேட்டாரு..’- இப்படி இவர்கள் பேசுவது எல்லாமே நாட்டின் உயர்ந்த போட்டித் தேர்வான ஐ.ஏ.எஸ்-ன் நேர்முகத் தேர்வு அனுபவங்களைப் பற்றித்தான்.
பத்து வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எட்டாத கனியாக இருந்த ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வில் இப்போது தமிழக மாணவர்கள் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள். 2008 -க்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் 42 மாணவர்கள் ஐ.ஏ.எஸ் வெற்றிக் கோட்டை தொட.. இந்த வருடம் 96 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள் என்ற இனிப்பான செய்தி கிட்டியுள்ளது. அதில் பாதி பேருக்கு மேல் சாமானியர்களாக இருந்து சிகரம் தொட்டவர்கள்.
‘‘ஐ.ஏ.எஸ்னாலே ஏதோ ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் பசங்கதான் பாஸாவாங்க.. அப்புறம் அதுக்குல்லாம் இந்தி தெரியணும் டெல்லி போய் படிக்கணும்’னெல்லாம் கவுண்டமணி ரேஞ்சுக்கு பயமுறுத்துவாங்க. ஆனா இங்கே அண்ணாநகர்ல சின்ஸியரா ஒரு வருஷம் படிச்சா போதும். ஏதாவது ஒரு சர்வீஸ் நிச்சயம் வாங்கிறலாம். என்னோட 6 வருஷ உழைப்பைவிட எங்க அப்பா அம்மா என்மேல வச்சிருக்குற நம்பிக்கை ரொம்ப பெருசு!’’ என்று வெற்றி பெற்ற பெருமிதத்தோடு பேசுகிறார் சசிகாந்த் செந்தில் இந்திய அளவில் 9-வது ரேங்க்கும் தமிழ்நாட்டில் முதல் ரேங்கும் எடுத்திருக்கிறார்.
‘‘கஷ்டப்பட்டு படிச்சா ஐ.ஏ.எஸ் ஆகிடலாம்னு சொல்வாங்க. ஆனா இஷ்டப்பட்டு படிச்சாலே போதும் கஷ்டபட தேவையில்லை. ஏன்னா எனக்குத் தெரிஞ்சு இந்த தேர்வு இருக்கிறதுலேயே கஷ்டமா இருக்குறது போல தெரியுற மிக எளிதான தேர்வு. நல்ல திட்டமிடல் தெளிவான உழைப்பு இருந்தா தினமும் 3 மணிநேரம் படிச்சாகூட போதும் உங்களால்கூட நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆகமுடியும். ஆனால் தோல்விகளைக் கண்டு துவளாத மனசு உங்களுக்கு இருக்கணும். ஏன்னா நான் 5 தடவை தோல்வி அடைஞ்சு என்னோட 6-வது முயற்சியில ஜெயிச்சிருக்கேன்.’’ என்கிறார் ஆனந்த். திருநெல்வேலியில் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 67-வது ரேங்க் வாங்கி ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார். எற்கனவே 2006-ல் இன்டெர்வியூ வரை சென்று நான்கைந்து மார்க்கில் சர்வீஸை தவறவிட்டவர் இவர். 
‘‘பொதுவா முஸ்லீம் பெண்கள் அதிகம் படிக்குற சூழல் இங்கே கம்மி. எனக்கு கல்யாணம் வேற ஆச்சு. என் மகள் கர்ப்பமா இருக்குறப்போ அகாடமிக்கு படிக்க வந்தேன். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே கிளாஸ். 4-வது முயற்சியில எனக்கு 520&வது ரேங் கிடைச்சிருக்கு. என்னோட கணவரும் என் குடும்பமும் கொடுத்த சப்போர்ட்டில் இப்போ 2009- ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த முறை முழுமுயற்சியா களத்துல இறங்கப்போறேன். நிச்சயம் அடுத்த வருடம் டாப் 10ல ஒரு ஆளா இருப்பேன்!’’ நம்பிக்கையோடு பேசுகிறார் குல்சார்.

காலேஜ் பக்கம் போகாமலே ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸாகி இருக்கிறார் மைக்கேல் ஜெரால்டு என்ற இளைஞர்.
‘‘நான் ஒரு மெடிக்கல் ரெப். தினமும் ஒரே மாதிரியான லேகியம் விற்குற பொழைப்புனு அளுத்து சளிச்சுக்குவேன். 5 வருஷத்துக்கு முன்னாடி நம்பிக்கையே இல்லாமதான் நான் அண்ணாநகர் படிக்க வந்தேன். எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனே  இறையன்பு ஐ.ஏ.எஸ்தான். டாக்டர் என்ஜினீயர்தான் ஐ.ஏ.எஸ் பாஸாவாங்கனு இருந்த நினைப்பை அவர்தான் உடைத்தெறிஞ்சார். தபால் வழில பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சு முடிச்சுட்டு படிக்க உட்கார்ந்தேன். சும்மா சொல்லக்கூடாது. இது என்னோட 5-வது முயற்சி. இந்த முறை ஐ.ஆர்.எஸ் கிடைச்சிருந்தாலும் என்னாலேயே நம்ப முடியலை. ஏன்னா ஸ்கூலும் பிரைவேட்டா எழுதி பாஸானவன் நான். எனக்கு ஆசானா அறிமுகமான ஒரே ஆள்னா அது கணேஷ் சார்தான்! எப்பவும் மெதுவா பைக் ஓட்டுவேன் அன்னிக்குனு பார்த்து என்னை அறியாம ஆக்ஸலேட்டரை முறுக்க.. ‘மெதுவா பைக் ஓட்டுலே! மனசுக்குள்ள என்ன பெரிய கலெக்டர்னு நினைப்பா’னு கேட்டாங்க. முன்ன அப்படி கேட்டிருந்தா கோபம் பொத்துக்கிட்டு வந்திருக்கும். ‘ஆமாண்ணே... நான் கலெக்டர்ணே’னு சொன்னேன். என்னைய வித்தியாசமா பார்த்துட்டு போனாரு அந்த ஆட்டோக்காரர்.’’- அதிர்வேட்டாய் சிரிக்கிறார் மைக்கேல் ஜெரால்டு.
காக்கிச் சட்டை கமல்ஹாசனைப்போல இருக்கும் ருடால்ஃபுக்கு தமிழ்சினிமாவின் காக்கி யூனிஃபார்ம் போட்டவர்கள் தேவ தூதர்களாம்!
‘‘சின்ன வயசில இருந்தே ஆர்மி ஆபிஸரா ஆகிடணும்னு கனவோட இருந்தேன். எம்.ஏ சோஷியாலஜி படிச்சு முடிச்சதும் ராணுவத் தேர்வுக்கு கடுமையா உழைச்சேன். கடைசி கட்டத்துல உடல்தேர்வுல பெயிலாகிட்ட்டேன். இனி நம்ம வாழ்க்கையே போச்சுனு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ‘காக்கினு ஒரு யூனிஃபார்ம் இருக்கே. அதைப் போட்டுக்கிட்டு மக்களுக்கு நல்லது பண்ணலாமே’னு கணேஷ் சார் நம்பிக்கை கொடுத்தார். போன வருஷம் ஐ.ஏ.எஸ் தேர்வுல பெயிலானாலும் இப்போ இரண்டாவது முயற்சியில 305-வது ரேங்க்ல ஐ.பி.எஸ் கிடைச்சிருக்கு. உலக சினிமாக்கள்ல நேர்மையான போலீஸ் ஸ்டோரிகளை டிவிடிகள்ல பார்த்துக்கிட்டு இருக்கேன்!’‘ குழந்தையின் குதூகலத்தோடு பேசுகிறார் ருடால்ஃப்!
அண்ணா யுனிவர்சிட்டியில் எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்த வம்சதாரா முதல்முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் பாஸாகி இருக்கிறார். ‘‘காலையில சீக்கிரம் எழுந்திருக்கவே பத்து தடவை யோசிக்குற ஆளு நானு. இப்போ பொறுப்பு கூடி இருக்கு சார்!’’ என்று அளவாக பேசுகிறார் வம்சதாரா.
‘‘498-வது ரேங்க் கிடைச்சதுனால ஐ.ஆர்.எஸ்தான் கிடைக்கும். சின்ன வருத்தம் இருக்கு. ஆனாலும் அடுத்த தடவை எப்படியும் ஐ.ஏ.ஏஸ் தேர்வாகிடுவேன்’’ நம்பிக்கையோடு சியர் அப் காட்டுகிறார் விமல்ராஜ்.
அடுத்து வெள்ளந்தியாய் பேசிய  வீரபாண்டியனை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. சில வருடங்களுக்கு முன் தினசரி ஒன்றில் ‘புரோட்டாக் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே படித்த மதுரை மாணவன் ப்ளஸ்-டூ தேர்வில் மாநில அளவில் சாதனை’ என்று செய்தியில் இடம் பிடித்தவர். முதல்வர் கலைஞர் அந்த செய்தியை படித்து ஒரு லட்சம் ரொக்கப் பரிசு கொடுத்தார். அந்த உற்சாகத்தில் மதுரையில் இருந்து சென்னை லயோலாவுக்கு சமூகவியல்  படிக்க வந்தவர் இன்று ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார்.



‘‘ புரோட்டா மாஸ்டரா பனியனோட ‘படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்வேன்’னு ஒரு வேகத்துல சொல்லிப்புட்டேன். என்னை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்கிடணும்னு ஆசைப்பட்ட எங்க அப்பாவை, ‘பஞ்சாரம் வைக்கக்கூட துப்பில்ல..கூமுட்ட கோழிக்கு வீடுபூரா முட்டைபோட ஆசைப்பட்டுச்சாம்’னு கிண்டல் பண்ண ஆளுங்களே இப்போ, ‘வைராக்கியக்காரன்யா நீயி! உன்மகனை கடைசில கலெக்டர் ஆக்கிப்புட்டியேய்யா!’னு சொல்றாங்களாம். அப்பா அலுமினிய பாத்திரங்களை சைக்கிள்ள வச்சுக்கிட்டு வீடுவீடா போய் வித்துட்டு வர்ற தொழில் செய்றாரு. அம்மா அரசு ஆஸ்பத்திரில துப்புறவுத் தொழிலாளியா இருக்காங. ஒரு பொண்ணு அதிகாரியா இருந்தாலே நம்ம சமூகத்துல என்னென்ன பிரச்னைகளை சந்திக்கணும்.. ஒரு சக்கிலியப் பெண்ணை எப்படி நடத்துவாங்கனு நீங்களே யோசிச்சுக்கங்க. ஆனா அவ்வளவு கஷ்டத்திலும் அவங்க என்மேல வச்ச நம்பிக்கையை குறைச்சுக்கலை. நான் எவ்வளவோ சம்பாதிக்குற வாய்ப்புகள் வந்தும் போகாம அண்ணாநகர்ல ‘சினர்ஜி அகாடமி’யில ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகுற பசங்களுக்கு சோஷியாலஜி பாடம் எடுத்துக்கிட்டே ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதிக்கிட்டு இருந்தேன். என்வீட்டுல ‘உனக்கு சரின்னு பட்டதை செய் ராசா!’னு சொல்லி உற்சாகப் படுத்துனாங்க. நான் துடி என்ற அமைப்பின் மாநில தலைவரா இருந்தேன். அந்த பொறுப்பை துறந்துட்டு படிக்க உட்கார்ந்தேன்.  சரியா போன நாடாளுமன்ற தேர்தல் அப்போ முதல்முறையா ஐ.ஏ.எஸ் தேர்வை எழுத ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு ஸ்டேஜ்ல தோல்வி எட்டிப்பார்க்கும். தோத்துட்டதா நினைக்காம அதெல்லாம் அடுத்தமுறை தவறுகளை திருத்திகறதுக்கான பாடம்னு நினைச்சு கூடுதல் தன்னம்பிக்கையோட தேர்வை அணுகுவேன். அதிலும் கடந்த 2007-ல இன்டெர்வியூ வரை போய் செலக்ட் ஆகலை. அதுக்காக வருத்தபடலை. எனக்கு என் திறமை மேல தீர்க்கமான நம்பிக்கை உண்டு. நல்ல உடுப்பு ஷ¨ வாங்க முடியாத நான் கடன்வாங்கிப் போட்டுக்கிட்டுதான் இன்டெர்வியூ போனேன். இந்திய அளவில் 54-வது இடத்தைப் பிடிச்சு ஐ.ஏ.எஸ் ஆகிட்டேன். இன்னிக்கு நான் நாலுபேருக்கு ரோல்மாடலா மாறி இருக்கேன்னு நினைக்கையில் சந்தோஷமா இருக்கு.’’ என்று பணிவோடு பேசுகிறார் வீரபாண்டியன்.
 ‘‘நீங்க நம்புனா நம்புங்க. நான் பி.காம் டிகிரியை பத்து வருஷமா படிச்ச ஆளு நான். அந்த அளவுக்கு படிப்புல வீக்கான ஆளு சார் நானு!  பார்க்குறதுக்கு பணக்கார வீட்டு பையன் மாதிரி இருந்தாலும் வீட்டுல ரொம்ப கஷ்டம். அப்பா தச்சு வேலை செஞ்சு படிக்க வச்சார். ஒரு காலத்துல அடுத்த வேலை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். அவ்வளவு கஷ்டத்திலயும் எங்க அப்பா என்னை சென்னை நியூ காலேஜ்ல பி.காம் படிக்க வச்சார். படிப்பைவிட பிஸினஸ் பண்றதுலதான் எனக்கு அவ்வளவு ஆர்வம். தேவையில்லாம என்னன்னமோ பண்ணிக்கிட்டு பணத்தை விரயமாக்கிட்டு குடும்பத்துக்கு கஷ்டத்தைக் கொடுத்துக்கிட்டு சராசரி பையனா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அப்போ ஒருநாள் சுப்பாராவ்ங்கிற ஒரு ரிட்டையர்டு ஜட்ஜ்ஜை எதேச்சையா சந்திக்குற சூழல் வந்துச்சு. அவர்தான் சிவில் சர்வீஸ் பத்தி எனக்கு சொன்னார். என்னமோ தெரியலை. அவரை மாதிரி ஒரு அதிகாரியா ஆகணும்னு அந்த நிமிஷம் முடிவு செஞ்சேன். பொது நிர்வாகமும் வரலாறும் என் விருப்பப் பாடங்களா தேர்ந்தெடுத்து   கிட்டத்தட்ட 2 வருஷம் பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமியிலதான் என் ஜாகையே. மத்தவங்களுக்கு எப்படியோ நான் வாங்குன 398-வது ரேங்க் ரொம்ப சராசரி மாணவனான எனக்கு அதிகபட்சம்தான். இப்போ ஐ.ஆர்.எஸ் கிடைக்கும். ஆனாலும் இந்த வருஷமும் ஐ.ஏ.எஸ் எழுதப்போறேன்.’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார் 29 வயதான சான் பாஷா!
‘‘இப்போ 442-வது ரேங்க் கிடைச்சிருக்கு. மிடில் கிளாஸ்தான் நாங்க. நான் ஐ.ஏ.எஸ் பாஸ் ஆகணும்னு அம்மா எனக்காக மெட்டீரியல் கலெக்ட் பண்ணித் தருவாங்க. நான் தூங்குற வரை அவங்களும் முழுச்சிருந்து மெட்டீரியல் தயாரிச்சுக் கொடுத்தாங்க. வீட்டுலயும் அம்மாதான் எனக்கு டீச்சர்.’’ என்று சொல்லி சிரிக்கிறார் கண்ணன்.
எல்லோரையும் போல சாஃப்ட்வேரில் கலக்க வேண்டும் என்று நினைத்து பெரிய ‘யூ டர்ன்’ போட்டு சர்வீஸ் வந்திருக்கிறர் பாலாஜி. தற்போது ஐ.பி.எஸ் தேர்வாகி இருக்கிறார்.

 ‘‘திருச்சி துறையூர்ங்க எனக்கு. கிண்டி என்ஜினீயரிங் காலேஜ்ல எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் படிச்சாலும் எனக்கு சின்னவயசுல இருந்தே ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆகணும்னு ஆசைனெல்லாம் இவங்களை மாதிரி நான் சொல்ல மாட்டேன். என் ஜினீயரிங் முடிச்சுட்டு நல்லா சம்பாதிக்கணும்னு நினைச்சுதான் அண்ணா யுனிவர்ஸிட்டி வந்தேன். சும்மா ட்ரை பண்ணுவோமேனு முயற்சி செஞ்சேன். 238-வது ரேங்க் கிடைச்சு ஐ.பி.எஸ் கிடைச்சிருக்கு. மெல்ல மெல்ல உங்களை மாதிரி ஆளுங்க பேட்டி எடுக்க வர்றப்போ  ‘அஞ்சாதே’ படத்தோட ஹீரோ நரேன் மாதிரி நல்ல போலீஸா மாறிக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். பொதுவா ஐ.பி.எஸ் படிக்க  ஜிம் போய் உடம்பை ஆஜானுபாகுவா வச்சுருக்கணும்... செம உயரமா இருக்கணும்னெல்லாம் தப்பா நம்ம பசங்க நினைக்கிறாங்க. நார்மலான காவலர்கள் இருக்குற உயரத்தைவிட கம்மியா இருந்தாகூட ஓரளவு பார்க்குற அளவுக்கு நார்மல் உடம்போட இருந்தாபோதும். நல்ல சமயோசித புத்தியும் ஆளுமைத் திறனை மட்டுமே பார்க்குறாங்க. இங்கே புத்திசாலித்தனத்துக்குத்தான் அவங்க மார்க் போடுறாங்க. ரொம்ப கூச்ச சுபாவம் உள்ள என்னால ஐ.பி.எஸ் ஆக முடிஞ்சதுன்னா நிஜமாலுமே ஐ.பி.எஸ் ஆகணும்னு உழைச்சு அதில இப்போ சாதிச்சுட்டும் இருக்குற  விஜயகுமார் ஐ.பி.எஸ், செந்தில்வேலன் ஐ.பி.எஸ் மாதிரியான மனிதர்களை என்னனு சொல்றது? அவங்களை இனிமேல் ரோல்மாடலா நினைச்சுக்கிட்டு சர்வீஸ§க்கு போகப் போறேன். என்னோட முதல் முயற்சியிலயே ஐ.பி.எஸ்&க்கு செலக்ட் ஆகி இருக்கேன். பொறுப்பான அதிகாரியா இந்தியாவோட எந்த மூலைக்கு கேடர் ஒதுக்கி அனுப்பினாலும் வேலை பார்க்குற மனசோட வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. பார்க்கலாம்!’’ என்கிறார் தன்னம்பிக்கையோடு!
இவரைப்போலவே ஐ.பி.எஸ் கிடைத்து காவல்துறை மீது காதலாகி கிடக்கிறார் தினேஷ். முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ் ரேங்க் கிடைத்திருப்பது அவரே எதிர்பார்க்கததாம்.
‘‘சும்மா எழுதிப்பார்ப்போமேனு நினைச்சுதான் கோச்சிங் சேர்ந்தேன். அப்புறம் வாராவாரம் வைக்குற டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்கணும்னு எழுதுனேன். ஆனா இவ்ளோ சீக்கிரத்துல முதல் முயற்சியிலயே ஐ.பி.எஸ் ஆவேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை பாஸ்!’’ என்கிறார் தினேஷ்!
ஐ.ஏ.எஸ் படிப்புக்கு வேலை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இளமுருகு. எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்த இவர் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்து 5 வருடங்கள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.
‘‘கிட்டத்தட்ட மூன்று வருஷ தொடர் முயற்சிக்கு அப்புறம் எனக்கு வெற்றி கிடைச்சிருக்கு. போன வருஷமே இன்டெர்வியூ வரை போய் செலக்ட் ஆகலை. எனக்கு பி.எல் படிச்சுட்டு அரசியல்வாதியா ஆகணும்கிறதுதான் கனவா இருந்துச்சு. அப்பாவுக்கு நான் கால்காசு சம்பாதிச்சாலும் அது அரசாங்க உத்தியோகமா இருக்கணும்னு ஆசை. என்னை எப்படியாச்சும் ஒரு அதிகாரியா பார்க்கணும்னு கனவு கண்டார். என்னோட 33-வது வயசுல அந்தக் கனவை பார்க்குறதுக்குள்ள அவர் இறந்துட்டார். ஒவ்வொரு முறையும் நெகடிவ்வா ரிசல்ட் வர்றப்பவும் அப்பாவுக்காக நாம பாஸ் பண்ணிடணும்னு ரிசல்ட் வந்த அடுத்தநாளே படிக்க உட்கார்ந்துடுவேன். இன்னிக்கு எங்க ஒட்டுமொத்த குடும்பமும் என்னோட வெற்றியை நினைச்சு பூரிச்சு கிடக்கு. எனக்கென்னமோ அப்பாவோட ஆசிர்வாதம்தான் பாஸாகிட்டேன்னு நினைக்கிறேன்!’’ சந்தோஷம் பொங்க சொல்கிறார் இளமுருகு.
ஐ.பி.எஸ் தேர்வாகியுள்ள நிர்மலாவுக்கு இது மூன்றாவது முயற்சி. ‘‘பொம்பளைப்புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு பிடிவாதம்.. வேற ஏதாச்சும் படிச்சு சம்பாதிக்க சொல்லலாம்ல.. இல்லைனா காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துருங்கனெல்லாம் அம்மா அப்பாக்கிட்டே அட்வைஸ் பண்ணவங்களை இப்போ நினைச்சு பார்க்கிறேன்!’’ என்கிறார் படு சென்டிமெண்ட்டாக!
‘‘தோற்றம் முக்கியம் அல்ல. நம்ம ஆளுங்க சில பேரு சினிமா பார்த்துட்டு ஐ.ஏ.எஸ்னாலே தளபதி படத்துல வர்ற அரவிந்த்சாமி மாதிரி செக்கச் சிவப்பா  இருக்கணும்னு நினைக்கிறாங்க. நான் காலேஜ் படிச்சது என்ஜினீயரிங்னாலும் ரொம்ப சாதாரண தோற்றம் உள்ளவன். ஆனா எனக்கு எப்பவும் அதை பத்தின வருத்தம் துளியும் இருந்ததில்லை. 4 வருஷம் தொடர்ந்து விடாம விரட்டி இப்போ கலெக்டர் கனவை நிறைவேத்திட்டேன். வடகிழக்கு மாநிலங்கள்ல கேடர் ஒதுக்கினாலும் கலெக்டராக நான் ரெடி!’’ என்கிறார் முத்துக்குமார். 
மனோதைரியம் மட்டுமே மூலதனமாக வைத்து தொடர்ந்து பதினோரு வருஷம் போராடி முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீதர்.


‘‘97-ல முதல் முறையா என்ஜினீயரிங் முடிச்ச சூட்டோடு எழுத ஆரம்பிச்சேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால தொடர்ந்து விடாமல் வருஷா வருஷம் தேர்வு எழுதிக்கிட்டே இருந்தேன். 2001-ல ஐ.ஏ.எஸ்ல மெயின் தேர்வு வரை போயும் இன்டெர்வியூவுக்கு கூப்பிடலை. இந்த நிலைமை 2006 வரை தொடர்ந்துச்சு. திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்துல நானே ஆசிரியரா பாடம் எடுத்துக்கிட்டே படிச்சதனால அந்த அனுபவத்தை வச்சே இப்போ சாதிச்சுருக்கேன்’’ என்று சொல்லும் ஸ்ரீதர் 589-வது ரேங்க் எடுத்திருக்கிறார். ஐ.ஆர்.எஸ் கிடைத்திருந்தாலும் அடுத்த ஆண்டும் எழுதப் போகிறாராம்.
சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளையில் பயின்றவர்களில் இந்த ஆண்டு 25-க்கும் மேலானவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள் இலவச பயிற்சி எடுத்த அருண்சுந்தர் ராமநாதன் மற்றும் சத்ய சுந்தரம் போன்றோர் மிகவும் வசதி குறைந்த விவசாயக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அருண் சுந்தர் தமிழக அளவில் 22-வது ரேங்க் எடுத்திருக்கிறார். இவரைத் தவிர மீதமுள்ளவர்கள் ஐ.பி.எஸ் ஐ.ஆர்.எஸ் ரேங்க் கிடைத்தும் திருப்தி இல்லாததால் மீண்டும் தேர்வை எழுதப் போகிறார்கள்.

456-வது ரேங் எடுத்திருக்கும் சுப்ரியா பிஸியான டாக்டர் கம் குடும்பத் தலைவி. இவரும் இந்த ஆண்டு மீண்டும் தேர்வை எழுதப்போகிறார்.
ஐ.ஏ.எஸ் தேர்வை தமிழில் எழுதி இன்டெர்வியூ வரை தமிழில் பேசுபவர்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற விதியை கடந்த சில வருடங்களாக உடைத்தெறிந்த வாலிபர்களுள் இந்த ஆண்டு சக்தி என்ற மதுரைக்காரர் உடைத்திருக்கிறார். மதுரை மாநகராட்சியில் தணிக்கைத்துறையில் இன்ஸ்பெக்ட்டராக இருக்கும் சக்தி இம்முறை ஐ.ஆர்.எஸ் தேர்வாகி இருக்கிறார்.
  
3 முயற்சிகளுக்குப் பிறகு மனம் தளராமல் 4-வது வருடமாக தேர்வு எழுதிய சுப்புலட்சுமிக்கு இந்த முறை ட்ரிபுள் டிலைட் சந்தோஷம். டி.என்.பி.எஸ்சியில் தேர்வாகி டெபுடி கலெக்டராக சமீபத்தில்தான் தேர்வானார். தற்போது இந்திய ஐ.ஏ.எஸ்ஸ§ம் தேர்வாகி உள்ளார். ஜூன் 4-ம் தேதி கல்யாணம் வேறு பொண்ணுக்கு. ‘‘இத்தனை வருஷம் கஷ்டப்பட்டதுக்கு அடுத்தடுத்து நல்லநல்ல விஷயங்களா என் வாழ்க்கையில நடக்குது! வெறும் சாதனையா இது இருந்திடாம சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை பண்ணணும்’’ என்கிறார் சந்தோஷமாக.
உங்களை நம்புறோம் ஆபிஸர்ஸ்!

 டெய்ல் பீஸ்:

ஐ.ஏ.எஸ் படிப்புக்கு டெல்லி போய்தான் படிக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி இப்போது சென்னையிலேயே அதே தரத்தில் கோச்சிங் கிடைக்கிறது என்பதுதான் நம்மவர்களுக்கு நல்ல செய்தி. இரண்டு வருடங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த நந்தகுமார் முழுக்க முழுக்க சென்னையில் படித்தவர்தான். தமிழக அரசு நடத்தும் ‘மத்திய அரசி குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்’, சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையின் இலவச பயிற்சி மையம் தவிர மிகவும் திறமையான மாணவர்களை உருவாக்குவதில் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, கணேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி, பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் சினர்ஜி அகாடமி போன்ற பிரபல பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அகாடமி வைத்திருப்பவர்கள் எல்லோருமே சில வருடங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் தேர்வில் இன்டெர்வியூ வரை போய் தேர்வாகாமல் போனவர்கள் தான்! இந்த வருடம் தேர்வான 93 மாணவர்களில் 70&க்கும் மேலான மாணவர்கள் இந்த பயிற்சி மையங்களில் படித்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் விருப்பப்பாடத்தையும் பொது அறிவுத்தாளையும் எல்லா அகாடமியிலும் தேர்வு செய்து படித்திருக்கிறார்கள். இதனால் இந்த முறை 70 மாணவர்களை உருவாக்கிய பெருமை மேலே சொன்ன அனைத்து அகாடமிகளுக்குமே சேரும்.
 ‘‘5 வருஷம் 6 வருஷம் போராடுன எங்க அனுபவமே ஒரு அகாடமி அரம்பிச்சு வாழ்நாள் கேரியரா அதை எடுத்துக்குற அளவுக்கு ஆர்வத்தை தூண்டி விட்டுருது. எங்க அகாடமிகளுக்குள்ள போட்டி எதுவும் கிடையாது. ஒவ்வொரு அகாடமியும் ஒவ்வொரு பாடத்தில சிறப்பா இருப்போம். ஒரு அகாடமியில பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பாங்க.. இன்னொன்னுல புவியியல் படிப்பாங்க இன்னொன்னுல வரலாறு சேர்வாங்க. எங்களுக்குள்ல நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருக்குறதால ஒருத்தர் இன்னொருத்தரோட அகாடமியை பரிந்துரைக்குற அளவுக்கு நட்போட இருக்கோம். இதனாலேயே மாணவர்கள் அவங்க சாய்ஸ்ல படிக்குற வாய்ப்பு இங்கே கிடைக்குது. கூடிய விரைவில் அண்ணா நகரின் ஒவ்வொரு அவென்யூவுக்கும்  ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் வந்திரும். ஐ.ஏ.எஸ் படிக்க வர்றவங்களை பயமுறுத்தாம எளிமையான கேள்விகளை தேர்வுகளில் கேட்டு அவங்களை தன்னம்பிக்கை அடைய வைகிறதுதான் எங்களோட பணி. சீனியர் ஆபிஸர்ஸ் இங்கே படிச்சுட்டு போனவங்களை வச்சு கோச்சிங் கொடுக்குறோம். ரொம்ப ஆர்வத்தோட கடல்ல நீந்த வர்றவங்களுக்கு கலங்கரை விளக்கம் போல இருக்குறது மட்டும்தான் எங்களோட வேலை. நீந்திக் கடக்குறது அவங்கதான். பெரும்பாலும் எல்லா அகாடமியும் அண்ணா நகர் ஏரியாவுக்குள்ள இருக்குறதால படிக்க வர்றவங்களுக்கும் இது வசதியா போயிடுது! எங்களுக்கு பணத்தைவிட தமிழ்நாட்டுக்கு நிறைய அதிகாரிகளை உருவாக்கிக் கொடுக்க முடியுதேனு கிடைக்குற சந்தோஷம்தான் ரொம்ப பெருசு!’’ என்கிறார்கள் ஒருமித்த குரலில்!




 

Read more...

>> Monday, April 27, 2009


ஓட்டுப் பொறுக்கிகளை செருப்பால் அடியுங்கள்! 
மனதை ரணமாக்கும் படங்கள் இவை. தயவு செய்து இளகிய இதயம் படைத்தோர்களும் இதய நோயாளிகளும் இந்தப் பதிவை தொடர வேண்டாம். நான் பதிவிட்டதற்குக் காரணம் இப்படியும்கூட ஒரு இனம் அழிக்கப்படுமா? என்ற கேள்வியை மொழி தெரியாத ப்ளாக்கர் எவனும் பார்த்தால் பதறிப்போவான்! அவன் மனதிலும் ஈரம் துளிர்க்கும் என்பதற்காகத்தான்! 
 சிங்கள‌ பேரினவாத டிராகுலாக்களும்,  'தமிழன் தமிழன்' என்று மேடையில் முழங்கி வீதிக்கு ஒரு மனைவி வைத்து முற்போக்கு சிந்தனை கொண்டவனாய் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு  ஈரேழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்த‌ கேடுகெட்ட ஜென்மங்கள்.. இப்போது ஓட்டுப் பொறுக்கிகளாய் நம் முன் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்கும் அரசியல் பேடிகள்.. இருவரும் ஒண்ணுதான் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள்!

மண்ணின் மைந்தர்கள் மண்ணோடு மண்ணாக போனதன் பின்னணியில் இருப்பது நம் ரத்தம் குடித்த அரசியல் அட்டைகள்தானே? எதிரிகளை மன்னிக்கலாம். தமிழின துரோகிகளை மன்னிக்கவே கூடாது. கொழுத்துப் போன.. புழுத்துப்போன இந்த சாக்கடைப் புழுக்களை ஓட்டெணும் ஆயுதம் கொண்டு ஓடஓட விரட்டுவோம்!ஓட்டரசியல் கேலிக்கூத்தானபோது அது ஒன்றுதானே குறைந்தபட்ச நிம்மதி நமக்கு. ஆனால் தேர்தல் கமிஷன் ஓட்டு போட விரும்பாதவர்களுக்கும் சேர்த்து பிரத்யேகமாக 'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்ற பொத்தனை அழுத்தும் வாய்ப்பு சட்டமன்ற தேர்தலுக்குள்ளாவது கிட்டும் என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்!
அதுவரை...
தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் பற்றுக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்..! ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...!!!








Read more...

சென்னை தாராவி!

>> Saturday, April 18, 2009


சென்னை சென்ட்ரலுக்கு முன்னே இருக்கும் மேம்பாலத்தை கடக்கும்போது ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.. பூங்காநகர் ரயில்நிலையத்துக்குப் பக்கத்தில் கூவத்தின் கரையை ஒட்டி இருக்கும் சத்தியவாணிமுத்துநகர்.. அடிக்கடி என் கவனம் கலைக்கும் இடம்! சென்னையின் நரம்பாக பின்னிப் பிணைந்து கிடக்கும் கூவம் நதியின் கரையில் ஆஸ்பெஸ்ட்டாஸே வானமாய் வியாபித்துக்கிடக்கும் அந்த பரந்த சேரிப்பகுதியை சென்னையின் தாராவி என்றும் சொல்லலாம்! (இந்த நாத்தத்துல எப்படி இவங்க வாழுறாங்க!) சத்யவாணிமுத்து நகர்&காந்தி நகர் கிட்டத்தட்ட ஹைதராபாத்&செகந்தராபாத் போல அருகருகே இருக்கும் இரட்டைச் சேரிப்பகுதி.. ஆனால் இப்போது அப்படி சொன்னால் நம்மை அடிக்க வருவார்கள்! காரணம் சத்தியவாணிமுத்துநகரின் ஒருபகுதியில் மிடில்க்ளாஸ் குடும்பங்கள் இப்போது வாழ்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு அற்புதமான மனிதர் அங்குதான் வசிக்கிறார். ஆனால் கூவத்தின் கரையை ஒட்டி கிட்டத்தட்ட 2964 குடும்பங்கள்.. 15000 மக்கள் குட்டிக்குட்டி வீடுகளில் வசிக்கிறார்கள்.. அதில் பாதி பேர் 18 வயது நிறையாத சிறுவர்&சிறுமிகள்! அந்த சென்னையின் தாராவிக்கு போய்வர வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை சமீபத்தில் நிறைவேறியது.
ஒருநாள் காலையில் டோனி பாய்லை விஞ்சிவிடத் துடிக்கும் எண்ணத்தோடு அங்கே கிளம்பினேன்.

சூரியன் தன் பிஞ்சுக் கதிர்களை பாய்ச்ச எத்தனித்த ஒரு காலைப் பொழுதில் சத்தியவாணி முத்து நகருக்குள் நுழைந்தேன். புதுப்பேட்டை பாடலைப்போல கூறுபோட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மல்லிப்பூவிலும் கூவத்தின் வாசம் அப்பிக் கிடந்த ரகளை ஏரியாவென்றால் சும்மாவா? உள்ளே நுழையும்போதே காற்றினில் வரும் வாசமாய் முதலில் கூவம் கமகமத்தது. குழந்தைகளும் பெண்களும் குழாயடியில் குடங்களை பரத்தி வைத்து தண்ணீருக்கு வரிசைகட்டி நிற்கிறார்கள். சில பெண்கள் வீட்டின் வாசலில் அடுப்பை வைத்து தோசை.. பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். நடந்து செல்லும் பிரதான சிமெண்ட் சாலையின் இருபக்கமும் அவசரத்துக்கு ஒதுங்கி இடத்தை அசுத்தமாக்கி வைத்திருந்தன ஏரியா வாண்டுகள்!

தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ள கழிவறை பீக் அவர் பிஸியில் இயங்கிக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே ஆயா ஒருவர் சுடச்சுட இட்லி&சட்னியையும், ஆப்பம்&தேங்காய்ப் பாலையும் ஓரமாக கடைவிரித்து பரபரப்பாக போணி பண்ணிக் கொண்டிருந்தார்.
‘‘ஏ.. சீக்கிரமா கொடுங்குறேன்ல.. பச்சப்புள்ளைய தொட்டில்ல போட்டுனு வந்துருக்கேன். வூட்டு ஆளு கௌம்பிடுவாரு ஆயா.. லேட்டாயிக்கினே இருக்கு பாரு! எட்டு ஆப்பம் ஸ்பீடா கொடு..’’ என்று அதட்டி வாங்கிச் செல்கிறார் ஒரு பெண்.
‘‘பார்த்து வாங்க சார்! அசிங்கம் கிடக்கு!’’ என்று எச்சரிக்கை மணி அடித்து அழைத்துச் சென்றார் ஒரு இளைஞர். கிட்டத்தட்ட பூ மிதிக்கும் உற்சவ எஃபெக்ட் கொடுத்தபடி தாவித்தாவி நடந்து கூவத்தின் கரையோரம் இருக்கும் அந்த நீ...ண்...ட 1000 மீட்டர் நீளம் 200 மீட்டர் அகலம் உள்ள தாராவி பகுதிக்குள் நுழைந்தேன். பத்துக்கு பத்து அளவில் மிகக்குறுகிய அறைகள்.. ஒரு சில வீடுகள் மட்டும் விதிவிலக்காய் சற்றே பெரிதாய் இருக்க.. நீளமாய் சங்கிலித் தொடர்போல குடியிருப்புகள் போய்க் கொண்டே இருக்கிறது.. ஒவ்வொரு வீட்டை கிராஸ் செய்யும் போதும் புதிதாய் ஒரு முகம்.. மலர்ச்சியாய்..மிரட்சியாய்..கேள்விக்குறியாய் பல கதைகள் சொன்னது!
எந்தத் தெருவில் ஆரம்பித்தேன்.. எங்கே நிற்கிறேன் என்று குழப்பி எடுத்துவிடும் ஆர்க்கிடெக்ட்.

‘‘கலீஜா இருக்குதுனு பர்க்குறீயா? எப்புடி இருக்கு எங்க ஏரியா.. மெர்சலா இருக்கா? இப்படித்தான் வாழ்றோம்..’’ வெண்கலக் குரலும் திமிங்கல உடம்புடன் பேசும் செல்வி ஒரு திருநங்கை!
‘‘கொஞ்சம் ஸ்பீடா வந்திருந்தேன்னு வச்சுக்கோ நீயும் அமீரை பார்த்திருக்கலாம் சார்! ராத்திரி முச்சூடும் ஷ¨ட்டிங் போச்சு. இப்போதான் அமீர் கார்ல ஏறிப் போறாரு!’’ என்று வாயில் நுரையுடன் சேர்த்து ராத்திரி ஷ¨ட்டிங் பார்த்த உற்சாகத்தையும் கொப்பளித்தார் பல்விளக்கிக் கொண்டிருந்த பாலு!
‘‘சார் நாஸ்ட்டா பண்ணு சார்!’’ என்றபடி பாசத்தோடு தோசை கொடுத்தார் அங்கிருந்த பாப்பம்மா என்ற பாட்டி! சற்றே நடுக்கத்தோடு வேண்டாம் என்றேன்.. பக்கத்தில் ஒரு சிறுமி கர்ம சிரக்தையாக இயற்கை உபாதையை போக்கிக் கொண்டிருக்க.. எனக்கு அடிவயிற்றுக்குள் என்னவோ பண்ணியது. ‘பரவாயில்லை..வேணாம்’ என்றபடி அவசராவசரமாய் மறுத்தேன்!

‘‘இன்னா சார் மெர்சலாயிட்டியா? துன்றப்போ அத்த ஏன் சார் நீ நெனக்குற..இன்னா பண்ணுறது கூவக்கரையில கருவாட்டுக்கவுச்சியல வாழ்றவங்க சார் நாங்க! இதெல்லாம் பழகிருச்சு.. சரி ந்தா.. இந்த டீயவாவது குடி!’’ மாவா தெறிக்க பாசமாய் பேசுகிற முருகன் நான் அந்த டீத் தண்ணியை குடித்து முடிக்கும்வரை என் பயோடேட்டாவைக் கேட்டு இன்புற்று ரிக்ஷா வலிக்க கௌம்பிப் போய்விட்டார்.
ஈசல் புற்றுக்குள்ளிருந்து விடுபடுவதைப் போல 8 மணிக்குள்ளே ஆண்கள் பிழைப்பைப் பார்க்க சாரைசாரையாக கிளம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளை குளிப்பாட்டி சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்ப பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல சுட்டிக் குழந்தைகள் அடம்பிடித்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி ஓடிப் பதுங்கின்றன!
‘‘ஏ ஸ்வேதா! நல்ல புள்ளை தானே நீயி! பட்சாதான் டாக்டர் ஆவ முடியும் கண்ணு.. ஆயாவுக்குலாம் ஊசி குத்த முடியும்.. இல்லாங்காட்டி ஆயா நோவுல செத்துப்பூடும்ல.. கிளம்புடா எந்தங்கம்! பள்ளிக்கூடத்துக்கு சமர்த்தா போகலைனா மாமாகிட்டே உன்னை வித்துருவேன்...’’ என்று என்னைக் காட்டி தன் பிள்ளையை பயமுறுத்தினார் கல்பனா என்ற பெண். நானும் ‘பெப்பே’ காட்டி கண்களை உருட்டி முழிக்க.. அந்தக் குழந்தை எழுப்பிய கதறல் கூவம் தாண்டிச் செல்லும் ரயில் வரை நிச்சயம் கேட்டிருக்கும்!

‘‘எல்லா மதத்து ஆளுங்களும் இங்கே இருக்காங்கோ சார்.. எங்களுக்குள்ள எந்த சண்டையும் இதுநா வரை வந்ததில்லை.. சர்ச்சு, மாஸ§,கோயிலு எல்லாம் ஒரே எட்த்துல இர்க்கு பாரேன்! சிட்டியில 500 ரூபா வாடகைக்கு வூடுனா இங்கேதான் வந்தாகணும் தெர்மா! அடவு வைக்க கபூர் (சேட்டு) குடும்பம் இங்கே இருக்கு! முக்கால்வாசி பேரு கூலிவேலைக்கு போறவங்கதான். ரிச்சா ஓட்றது, கொழுத்து வேலை, கூலி வேலைனு இருக்கோம்.. ஒரு சில பேரு கவருமெண்டு வேலை வரைக்கும் இருக்காங்கோ! பொறந்ததுலயிருந்தே இங்கேதா கெடக்கோம். கவருமென்ட்டு எங்களுக்கு கரெண்ட் வசதி தண்ணி வசதி மட்டும் செஞ்சு கொடுத்திருக்கு.. ஆனா பாதி பேருக்கு மேலே ரேஷன் கார்டு இல்லை சார்.. ’’ என்றார் ஏகாம்பரம் தாத்தா பொக்கை வாயுடன்!
‘‘அப்பப்போ ஏதாவது தொண்டு நிறுவனத்து ஆளுங்க உள்ளே வந்து பார்த்துட்டு சுகாதாரமா இருக்கணும் மக்களே.. ‘கக்கூஸ்ல கக்கா போங்க..’, ‘வூட்டுக்குப்பின்னே உச்சா போங்க..’ன்னு வந்து கூவிக்கினு இருப்பாங்கோ. இங்கே இருக்குற சனங்களுக்கு ரெண்டே ரெண்டு கக்கூஸ்தான் இருக்கு.. அதுவும் நாலு வருஷத்துக்கு முன்னாடி தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்தது. ஆனா இப்போ அவங்களும் வர்றதில்லை. சனத்தொகை பெருகிப் போச்சு சார்!..’’ என்றார் தாமு என்ற இளைஞர். இவர் காந்திநகர் பகுதி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பாளராக இருக்கிறார்.

‘‘என்னிக்காச்சும் ஓட்டுக்கோசரம் கட்சிக்காரங்க வருவாங்க.. அவ்ளோதான்! ரேஷன் கார்டு கேட்டு போய் நின்னாக்கா ஆபிஸருங்கோ ஏதோ பிச்சைக்காரங்கள பார்க்க சோல விரட்டுற மாதிரி அடிச்சி வெரட்டுறாங்கோ! கிஸ்னாயில், அரிசி இல்லாம இன்னாத்த சோறு காச்சுறது? ஏதோ கிடைச்சதை வச்சுக்கினு அன்னின்னிக்கு கஞ்சியைக் குடிச்சுகினு முடக்கிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் இந்த கவருமெண்ட்டு வக்கில்லாத வாழ்க்கையைத்தான் தருது!’’ உலர்ந்த சிரிப்போடு சின்னராசு என்பவர் சொல்ல ஆமோத்தித்து தலையாட்டினேன்.
‘‘என்னண்ணா சாராண்ட போய் நம்ம கஷ்டத்தை சொல்லி ஃபீலிங் காட்டுறே.. நாங்க இங்கே சந்தோஷமா தான் சார் இருக்கோம்..’’ என்றார் ‘கல்லறை’கருப்பன் என்ற வாலிபர்..ஏரியாவின் அறிவிக்கப்படாத ஆர்.ஜே. யார் கேட்டாலும் நின்று நிதானித்து ஒரு கானா பாட்டு எடுத்துவிட்டுச் செல்வதுதான் இவர் ஸ்பெஷாலிட்டி! அந்தப் பக்கம் கிராஸ் செய்தது ஷேர் ஆட்டோ ஒன்று ‘ஷேர்&ஆட்டோ பத்தி பாடு தலீவா!’ என்றேன்.

‘‘ஷேர் ஆட்டோ ஷேர் ஆட்டோ..
ஜனங்களுக்கு ஷேர் ஆட்டோ..
அஞ்சு ரூபா காசைக் கொடுத்தா
பறக்குறானே பிளேனாட்டம்!
ஏறிக்கம்மா ஏறிக்கம்மா ஏறிக்கம்மா
அந்த காசிமேடு, ராயபுரம் கல்மண்டபம்’’
& என்று ரகளையாக ‘மீனாட்சி மீனாட்சி..’பாடலை சபேஷ் குரலில் பாடி பட்டையைக் கிளப்பினார்.
‘‘இங்கிருக்குறவனுங்க ஒவ்வொருத்தனுக்கும் லவ் இருக்கு சார்.. நாகூட ஒரு ஃபிகரை டாவடிச்சேன்.. செம ஜிலாக்கி சார் அவ! ஹஸ்பன்ட் ஒஃய்பாவே வாழ்ந்தோம்னு வையி.. அவ பேரை நெஞ்சுல பச்ச குத்திக்கினு அலைஞ்சேன் சார். ஒர்நா..‘ஏ கருப்பா உனக்கு படிப்பு போதாது..என்னைய மறந்திடு!’னு பட்டுனு சொல்லிட்டு பறந்திட்டா! அவ நினைப்பாவே புத்தி பேதலிச்சு மென்டல் கணக்கா டோப்பு வலிச்சுனு திரிஞ்சேன் சார்! அப்பாலிக்கா உக்காந்து சுருவா யோசிக்காசொல்லொதான் ஒண்ணு வெளங்கிச்சு.. அவ மின்னாடி வாய்ந்து காட்டணும்னு.. கானாவ வெறி பிடிச்சு பாடிட்டு திர்ஞ்சேன்.. அவளை திட்டியே நூறு பாட்டுக் கட்டி இருக்கேன்.. கலைஞர் டி.வி கானாக்குயில் பாட்டு வரைக்கும் போய்ட்டு வன்ட்டேன்.. இப்போ இதே ஏரியாலதான் அந்த ‘டிச்சு’ இருக்கா.. ரெண்டு குழந்தைக்கு தாயாப்பூட்டா.. அப்புறமா மெல்லமா வந்து உரசப் பார்த்தா.. போடி சாவுகிராக்கினு சொல்லிட்டேன் சார்!’’ பெருமிதத்தோடு கலகலவென பேசுகிறார் கருப்பன்.

‘‘இப்போ போன மாசம் என் லவ் மேட்டரையெல்லாம் தெர்ஞ்ச பொண்ணை கண்ணாலம் கட்டிகினேன். வாழ்க்கை டக்கரா போய்க்கினு இருக்கு!’’ என்றவர்,
‘‘எங்க சேரியில பெருசா ப்ராப்ளம் எதும் இல்லை சார்.. பொஞ்சாதிகூட சந்தோஷமா இருந்தா பக்கத்துக்கு வூட்டுல தெரிஞ்சுப்புடும்னு ஒரு பயம் எப்பவும் இருந்துனே இருக்கும்! கோவாலு அண்ணா காலையில கண்ணடிச்சு சிரிக்கும்.. ‘நீ மட்டும் லேசா.. அன்னிக்கு மட்ட மத்தியானத்துல மேட்டினி ஷோ ஓட்டுனவன்தானே நீயி’!னு சொல்லி ஓட்டுவேன்.. அதெல்லாம் ஜாலிக்கு சார்! இவன் பொண்டாட்டியை அவன் வச்சுனுக்கிறான்.. அவன் புருஷனை இவ வச்சுனிக்கீறானு உங்க நூஸ் பேப்பர்ல போடுவீங்களே.. அப்படி கள்ளக் காதல் கண்றாவிலாம் இங்க கெடையாது சார். உழைச்சமா வந்து தூங்குனமா.. மறுநா பொயப்புக்கு போனோமானுதான் எங்க வாழ்க்கை ஓடுது.. இதுவரைக்கும் சாதிச்சண்டையோ.. மதச்சண்டையோ இங்கே வந்ததில்லை.. எவனாவது கஞ்சா வித்தான்.. மப்படிச்சு மல்லாந்தான்னுதான் போலீஸ§ பொட்டி கேஸ் போடும்! எங்கேயாவது ஊருநாட்டுல இருந்து ஓடியாந்த பசங்க பேப்பர் பொறுக்கிக்கினு மெல்ல மெல்ல இங்கே வந்து செட்டிலாகிருவானுங்க.. நந்தி சிலை மாறி எங்க ஏரியாவும் பெர்சாயிட்டு இருக்கு.. கடைசி வூட்டுல பலப்பம் கேட்டு அழுற கொழந்தை.. பொண்டாட்டிகிட்டே கட்டிங்குக்கு காசை உஷார் பண்ண கெஞ்சுனுக்கீற புருஷன், கொழம்புல பல்லி விழுந்துருச்சுனு கத்தினுக்கீற நாலாவது வூட்டு ஆயா, ஏப்பம் விடுற பக்கத்து வூட்டுக்காரர்னு ஒரு செகன்டுல லைன் வூடுல இன்னா நடந்தாலும் தெர்ஞ்சுபுடுதுல்லீயா. இப்படி கசகசனு கூட்டமா வாழ்றதான் சார் சொகம்!’’ என்று சொல்லி சிரித்தார்.
குப்பென்ற கூவத்தின் வாடை நாசியில் ஏற..மூக்கை எதேச்சையாக பொத்தினேன்.
என்னைப் பார்த்து தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த ராமசாமி என்ற பெருசு எழுந்து வந்தார்..
‘‘ந்தா.. இந்த கூவம் நாத்தம்தான் எங்களை நிம்மதியா வச்சுருக்கு! இது மட்டும் இல்லைனா பணக்கார கம்னாட்டிங்கோ இந்த எடத்தை ஃப்ளாட் போட்டு வித்து எங்க வாழ்க்கைல மண்ணை அள்ளிப் போட்டிருப்பானுங்கோ! நீங்கள்லாம் மூக்கைப் பொத்திக்கினு போறவரைக்கும்தான் நிம்மதியா பொயப்ப பார்க்க முடியும் வாத்யாரே!’’ என்று போகிற போக்கில் அதிர்ச்சியான மேட்டரை வீசிவிட்டுப் போனார்.
‘‘உண்மைதான் சார்! கூவம் நதி மட்டும் அழுக்கா இல்லைனா இந்நேரம் இந்தக் குடியிருப்புங்க எல்லாமே பில்டிங்கா ஆகி இருக்கும்! இதே கூவக்கரையில அடுக்கு மாடிக்கட்டிடங்கள் முளைச்சிருக்கும்.. எங்க சனங்கள்ல பாதிபேர் ப்ளாட்ஃபார்முக்கு வந்துர வேண்டியதான்! சொல்லப்போனா எங்க சனத்தை முதலாளித்துவ வர்க்கத்தோட ஆக்கிரமிப்பில இருந்து பாதுகாக்குற கவசமாதான் கூவம் இருக்கு!’’ கலைமணி என்கிற கம்யூனிஸட் தோழர் சொல்லச் சொல்ல சுற்றிலும் நின்றிருந்த அத்தனை ஜனங்களும் சிரிப்போடு தலையாட்டி ஆமோதிக்கிறார்கள்.

அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அந்தக் காற்றை ஆழ்ந்து சுவாசித்துவிட்டே வந்தேன்..
அந்த நெடி.. மக்களின் புழுக்கம், வீடு வந்து சேர்ந்த பின்னும் மனசைவிட்டு அகலவில்லை!
அடுத்தமுறை சென்டரல் போகும் வழியில் வலப்பக்கம் பார்த்தேன். அங்கே குடிசைகள் இல்லை.. எல்லாம் கோபுரங்களாய் தெரிந்தது எனக்கு!

பின் குறிப்பு:
இந்தப் பதிவுக்கு படங்கள் தந்து உதவும் பொருட்டு என்னைப்போல சத்யவாணி முத்து நகருக்கு விசிட் அடித்த அன்புத் தம்பி...நாளைய ஒளி ஓவியன் மாதேஷுக்கு நன்றிகள் பல‌!

Read more...

முத்துக்குமரனுக்கு வீர வணக்க கவிதை!


முத்துக்குமார்...
அகண்ட தமிழினத்தின்
அணையா தீபமே!

எரியவில்லை தோழா
மண்ணைக் காக்க
மலர்ந்த மாவீரன் நீ!

வீழவில்லை தோழா
தமிழீழ விடியலுக்காய்
எழுந்த சூரியன் நீ!

நீ உரசிய நெருப்பில்
பற்றிக் கொண்ட
தீப்பந்தம் ஆறு கோடி!

நீ எழுதிய எழுத்தில்
கிழிந்து விட்டது
அதிகார வர்க்க முகமூடி!

இறப்பில் பிறந்தவனே
எம் கண்கள் திறந்தவனே
நீ தந்த எழுச்சியில்
தொடரும் போராட்டம்
அணையாத புரட்சியில்
மலரும் தமிழீழம்!

- நண்பன் ராஜுமுருகன் எழுதிய கவிதை இது. தமிழகம் எங்கும் இந்த வரிகளை பரவச் செய்ய வேண்டும் என்று விழைந்தோம். நண்பர் பாரதி தம்பியின் சீரிய முயற்சியால் இந்தக் கவிதை இணையம் மூலமாக பல தமிழ் நெஞ்சங்களை ஈரமாக்கியது. முத்துக்குமாரின் கடைசி கடிதம் தந்த பாதிப்பை அப்படியே தாங்கி நிற்கிறது நண்பனின் இந்த நம்பிக்கைக் கவிதை! வாழ்க தமிழ்! வளர்க முத்துக்குமரனின் தியாகப் புகழ்!

Read more...

சத்யராஜின் டீ‍‍ஷர்ட் வாசகம்!

>> Friday, April 17, 2009








''ரெண்டு நாளா மனசே சரியில்லைங்க... ஒரு வாய் சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது!'' சத்யராஜின் சிவந்த முகத்தில் அப்பிக்கிடக்கிறது சோகத்தின் சுவடு. கறுப்பு டி-ஷர்ட்டில் பளீரிடுகிறது 'ஸ்டாப் தி வார் இன் லங்கா' வாசகம். ''என்னென்னவோ பண்ணணும்னு தோணுதுங்க. ஆனா, எதுவுமே பண்ண முடியாமப் புழுங்கித் தவிக்கிற நிலைமை. அப்படியாவது உயிரைப் புடிச்சு வெச்சுக்கிட்டு இருக்கணுமான்னு தோணுது!'' - ரெக்கார்டரை அவ்வப்போது ஆஃப் செய்துவிட்டு, 'ஆஃப் தி ரெக்கார்டா'க வெளிப்பட்ட வேதனைதான் அதிகம்.

''எதையும் பட்படார்னு போட்டு உடைக்கிற நீங்களே ஈழப் பிரச்னைக்கு ஆதரவா குரல் கொடுக்க முடியாமல் அமைதி ஆகிட்டீங்களே..?''

''இது அமைதியும் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை; என்னோட கையாலாகாத்தனம். சட்டத்துக்கும் நான் சார்ந்த தொழிலுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிலைமை. அதை நினைச்சா, எனக்கே வெட்கமா இருக்கு. உலகம் முழுக்க இருந்து வேதனைக் குரல்கள் போன் வழியாக் கொட்டுறப்போ, நடக்குற வன்கொடுமைகளை நினைச்சு ரத்தம் கொதிக்குது. ஒரு தமிழனா அந்த மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள் ளிப் போட முடியாததை நினைச்சு நிமிஷத்துக்கு நிமிஷம் வெட்கப்பட்டுட்டு இருக்கேன். எங்களைப் போன்றவர்களாவது பரவாயில்லை. இங்கே நிறைய பேர், 'அது ஏதோ பக்கத்து நாட்டுப் பிரச்னை. நமக்கென்ன வந்துச்சு'ன்னு நினைச்சுட்டு இருக்காங்க. அப்படியே பக்கத்து நாட்டுப் பிரச்னையாவே நினைச்சாவது, அதைத் தீர்க்கிறதுக்கு முனைப்பு காட்டலாம்ல?

புலமைப்பித்தனோட 'பூகோளமே பலிபீடமாய்' புத்தகத்துல, இலங்கையின் பூகோள அமைப்பே எப்படி இன அழிப்புக்குக் காரணமா இருக்குனு விளக்கியிருப்பாரு. ஒரு இனம்... நம்ம சொந்த இனம் கண்ணு முன்னாடி அழிக்கப்படும்போது ஒரு சக மனுஷனாகவாவது அதைத் தடுக்கக் குரல் கொடுக்கணும். கண்டுக்காம நம்ம வேலையைப் பார்க்குறது எவ்வளவு பெரிய அநியாயம்! என் அளவுக்கு ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்களோட போராட்டங்கள் மூலமாகவும் என் ஆதங் கத்தை வெளிக்காட்டிட்டுதான் இருக் கேன். இதுக்கு மேலே ஒரு தனி மனுஷனால் என்ன பண்ண முடியும்னு தெரியலை. வெட்கமும் வேதனையுமா இருக்கு!''

''ஈழப் பிரச்னையை மையப்படுத்தி இங்கே நடக்கும் அரசியல் கூத்துகள் குறித்து உங்க கருத்து?''

''தமிழக அரசியல்வாதிகளில் உண்மையான உணர்வாளர்கள், போலியான உணர்வாளர்கள்னு ரெண்டு பிரிவு இருக்காங்க. இதுல யாரா இருந்தாலும் தேர்தலை மையமா வெச்சுக் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம். நான் தொழில் சார்ந்து கையாலாகாத நிலையில் இருப்பது போல, அவங்க தேர்தல் சார்ந்து அதே நிலையில் இருக்காங்க. தங்கள் உணர்வுகளை நடைமுறைப்படுத்த இங்கே அதிகாரமும் பதவியும் கிடைச்சாதான் சாத்தி யம். அதுக்கான போராட்டங்களில் இப்போ இருக்காங்க. ஆனா, இதெல்லாம் நடந்தேறுவதற்குள் அங்கே என்ன கந்தரகோலம் காத் திருக்கோ... தெரியலை. யாரையும் குத்தம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். மனசுல பட்டதைச் சொல்றேன்.''

''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னடைவுச் செய்திகள் பற்றி என்ன நினைக்கிறீங்க?''

''கொடுமைங்க. என் சூழ்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பத்தி என்னால மனசுவிட்டுப் பேச முடியலை. ஒண்ணு மட்டும் உண்மை... விடுதலைப் போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெற்றே தீரும்கிறது உலக நியதி! ஆனா, அதற்கிடையில் பாவப்பட்ட மக்களை அழிப்பதை என்ன காரணம் சொன்னாலும் சகிச்சுக்க முடியாது. இப்போ அங்கே நடுநடுங்கி நிக்கிற மூணு லட்சம் மக்களையாவது உயிரோடு மீட்டாகணும். ஒரு லட்சம் மக்கள்தான் இருக்காங்கன்னு சொல்ற இலங்கை அரசோட விஷமத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்!''

''இந்தத் தேர்தல்ல எந்தக் கட்சி சார்பாகவாவது பிரசாரம் பண்ணுவீங்களா?''

''எந்த அரசியல் சார்பும் இல்லாதவனாகத்தான் நான் இருக்க விரும்புறேன். அப்போதான்
சுதந்திரமா நினைச் சதைச் செய்ய முடியும். இப்போ இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்
சி.மகேந்திரனின் போராட்டத்தில் ஓர் உண்மையான உணர்வாளனா என்னால் கலந்துக்க முடியுது. தம்பி திருமாவளவன் கட்சி அலுவலக விழா விலும் நான் நிக்கிறேன். இந்தச் சுதந்திரம் பறிபோகக் கூடாதுனு நினைக்கிறேன். பிரசாரத்துக்காக எல்லாக் கட்சிகளும் பல வருஷமாக் கூப்பிட்டுட்டுத்தான் இருக்காங்க. ஆனா, வர முடியாதுனு உறுதியா சொல்லிட்டேன்!''

''உங்க சம கால நண்பர் விஜயகாந்த்தின் அரசியல் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீங்க?''

''விஜயகாந்த்தோட அரசியல் வளர்ச்சி பத்தி இப்ப என்னால பளிச்னு எதுவும் சொல்ல முடியலை. இப்பவும் நேர்ல சந்திக்கிறப்போ, பழைய நட்போடு பேசுவார். ஆனா, அரசியல் மட்டும் பேச மாட்டார். எனக்கு அது பிடிக்காது, தெரியாதுன்னு அவருக்குத் தெரியும். அந்தச் சாதுர்யத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்தணும். உங்களைப் போல நானும் அடுத்து அவர் என்ன பண்ணப்போறார்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்!''

''தங்கர் பச்சானோட 'களவாடிய பொழுதுகள்' படத்துல திரும்பவும் பெரியாரா நடிக்கிறீங்களாமே?''

''ஒரு பாட்டுல மட்டும் அப்படி நடிச் சிருக்கேன். மே தின விழாவில் பெரியார் வர்ற மாதிரி ஸீன். அப்படியே நைஸா தங்கர்கிட்ட, 'கார்ல் மார்க்ஸ் மாதிரியும் ஒரு வேஷம் போட்டுக்கவா'ன்னு கேட்டுப் பார்த்தேன். 'அடுத்த படத்துல பார்க்கலாம்'னு சொல்லிட்டார்!''

- ஆனந்த விகடன் 22.4.09 தேதியிட்ட இதழில் ச‌த்யராஜின் குமுறல்!

Read more...

சிங்கம் களமிறங்கிருச்சு!!!

>> Saturday, April 11, 2009

வீரத் தளபதி ஜே.கே.ரித்தீஷின் ஃபோட்டோ ஷூட் சுடச்சுட!

ஜே.கே.ரித்தீஷுக்கு சீட் கொடுக்கப்பட்டதில் அதிகம் உற்சாகத்தில் இருப்பவர்கள் ராமநாதபுர வாழ்மக்கள்தான்! இருக்காதா பின்னே.. இனிமே அங்கே பணப்புழக்கம் அதிகமாகிடும்ல! மண்ணின் மைந்தன் தொகுதிக்குள்ள பண்ணப்போற அட்றாசிட்டிக்காவது ஓட்டு விழும்கிறது என் கணிப்பு.
இந்தப் படங்களை பதறாம பார்த்துட்டு சிதறாம எனக்கு கமெண்ட் போடுங்க! ஜே.கே.ரித்தீஷுக்கு ஓட்டு போடுறதோ அல்லது அவரை மண்ண கவ்வ வச்சு பின்னால‌ வேட்டு வைக்கிறதோ உங்க தனிப்பட்ட விருப்பம்!
வர்ர்ர்ட்டா...!


Read more...

சே குவேராவும் காரா சேகுவேராவும்!

>> Thursday, April 09, 2009


தலைப்பைப் படித்து குழம்பிவிடவேண்டாம். இன்றைய தேதியில் கோடம்பாக்கம் முட்டு சந்துகளிலும் மூத்திர சந்துகளிலும் ஆஃப்பாயில் வித் ஆஃப் மானிட்டர் சரக்கு அடிக்கும் மப்பு மாப்பிள்ளைகளின் ஏகதேச அடையாள வார்த்தையாகிப் போனார் எர்னெஸ்ட்டோ சே குவேரா! அர்ஜென்டினாவில், கியூபாவில், பொலிவிய காடுகளில் புரட்சி முழக்கமிட்ட தோழர் சே குவேராவின் வாழ்க்கை சரித்திரம் இங்கு தேவையில்லை. சீமான் போன்ற தோழர்களால் அடிக்கடி நினைவூட்டப்பட்ட சே‍‍‍‍ குவேராவை அக்குவேரா ஆணிவேரா மாற்றிப்போட்ட பெருமை நம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு சில‌ குவார்ட்டர் கோமான்களுக்கும் உண்டு. அவர்களைப்பற்றி மட்டும் இங்கு எழுத விரும்புகிறேன். சே குவேரா பேரைச் சொல்லி இங்கு அடிக்கும் கூத்துக்களை வெளிச்சமாக்கவோ அல்லது நாந்தான் சே வின் உண்மை விசுவாசி என்று கூறவோ இந்த பதிவில் விழையவில்லை. சற்றே என் ஆதங்கத்தை கொ(கு)ட்டும் எண்ணம் மட்டுமே என் நோக்கம்! என் ந‌ண்பன் ஒருவனே ஆகச்சிறந்த உதாரணம். நண்பர்களை உரிமையோடு குற்ற‌ம் சொல்லலாம் என்கிற அளவீட்டை உரிமையாக்கிக் கொண்டு இதை எழுதுகிறேன். என் நண்பனுக்கு நான் வைத்திருக்கும் பேர் காரா சேகுவேரா! பெயரா முக்கியம் சொல்ல வேண்டிய சங்கதிதானே ரொம்ப முக்கியம்! சில வருடங்களுக்கு முன்பு பழக்கமானான். நாளைக்ககே உலகம் அழிந்துவிடுவதைப்போல குடிப்பான். நடுநிசி 2 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்புவான். தூக்க களக்கத்தில் எடுத்துப் படித்தால், 'பொலிவியா காட்டில் புரட்சி வெடிக்குமா?' என்று ஒற்றைவரி ஆர்டிஎக்ஸ்! விடிந்ததும் அவனிடமே இதைப்பற்றிக் கேட்டால், ''நண்பா! நேத்து கொஞ்சம் மப்பு ஓவராயிருச்சு! சே மட்டுமே மனசில நின்னார். அதான் உங்களுக்கு மெஸேஜ் தட்டிவிட்டேன். எனக்கு என்னமோ ஒரு வைப்ரேஷன்...!" என்று ஜல்லியடிப்பான். ஆளும் தாடியும் சே வை நினைவுறுத்தும் அப்படி ஒரு ஆள் அவன். பாசம் வந்தால் கட்டிப் பிடிப்பான். மனசுக்குள் சில பல கெட்டவார்த்தைகளை உகுப்பேன். எப்போதும் ஒருவித பரபரப்போடு அழுக்குப் பையனாகவே திரிவான். கேட்டால், ''புரட்சிக்காரனுக்கு தூக்கம் ஏது குளியல் ஏது? எனக்கென்ன உங்களைப்போல காதலியா இருக்கு?" என்று எதிர்க்கேள்வி கேட்பான். ''இப்படி அழுக்கா திரியணும்னு சே சொன்னாரா?" என்று கேட்டால் முறைப்பான். உதவி இயக்குநராக துடிக்கும் அவனுக்கு
எந்த நேரமும் சரக்கடிக்கவேண்டும் என்ற ஆர்வம் எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கும். சுப்ரமண்யபுரம் படத்தைப்போல 'பழக்கத்துக்காக' இவனை சகித்தே ஆக வேண்டிய கட்டாயம்! திடீரென்று லேண்ட் லைனிலிருந்து போன் பண்ணுவான். எடுத்துப்பேசினால் சரக்கு வேண்டல் விண்ணப்பம்!
உதாசீனப்படுத்தி கண்டுகொள்ளாமல் விட்டால் சே குவேரா உதிர்த்த வார்த்தைகளை தேடிப்பிடித்து எஸ்.எம்.எஸ் செய்துவிட்டே தூங்குவான். இவனுக்காகவே சே குவேராவின் பொன்மொழிகளை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.. பதில் எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவதற்காக! உலக இலக்கியம் கலக இலக்கியம் என்று ஏதேதோ பேசுவான். ஆனால் மொக்கையாக இருக்கும். அது வந்த மூலம் எனக்கு தெரியும். நிஜமாகவே கொஞ்சம் போதையும் நிறைய சே வைப் பற்றி பேசும் நண்பர்களை இவனை சந்திப்பதற்கு முன்பே சந்தித்தவன் நான்! நான் அறிமுகப்படுத்தி வைத்த அந்த நபர்களின் சாயலில் பேசுவது இவன் வழக்கம். வயதில் சின்னவன் என்றாலும் 60 வருஷ அனுப உரைகளை உகுப்பான். இதனாலேயே இவன் பெயரை என் செல்போனில் மொக்கை என்றே பதிவிட்டிருக்கிறேன். ஒருமுறை அவன் பெயரை நான் எப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதைப்பார்த்து, ''இந்த உலகம் புரட்சியாளனை அங்கீகாரிக்காதுன்னு எனக்கு தெரியும் நண்பா" என்றான் அப்பாவியாய்!
கைநிறைய சமபளம் புரளும் வேலையை உதறித் தள்ளிவிட்டு கோடம்பாக்கத்து முட்டுசந்துகளில் பீர் பாட்டிலோடு திரிவதில் அலாதி பிரியம் அவனுக்கு. ''நாளைக்கு உங்களுக்கும் ஒரு படம் வாய்ப்பு தரலாம்னு நினைக்கிறேன்!" என்று பிளாக் மெயில் செய்வான்.
''நண்பா இன்னிக்கு மதியானம் சாப்பாடு வாங்கிக் கொடுங்க.. என்னது காசில்லையா? பொதுவுடமைக் கொள்கைனா என்னனு தெரியுமா உங்களுக்கு? தயவு செஞ்சு சே குவேராவை படிங்க! இப்படி அதிகார வர்க்க பிரதிநிதியாக இருக்காதீங்க‌" என்றெல்லாம் பிதற்ற ஆரம்பிப்பான். கோபமாக கட் பண்ணிவிடுவேன். (பின்னே சட்டைப்பையில் 5 ரூபாய் சில்லரைகளை மட்டுமே வைத்திருக்கும் என்னை முதலாளி வர்க்கமாய் சித்தரித்தால்!)
சிறிது நேரத்தில் லைனுக்கு வந்து, ''ஹலோ நண்பா.. இப்படி அதிகார வர்க்க ஆளா இருக்கீங்களே.. கொஞ்சம் இந்த ஏழையையும் கண்டுக்கங்க!" என்று சொல்வான். எனக்கு பாவமாக இருக்கும். யார் பெத்த பிள்ளையோ இப்படி ஆயிருச்சே என்று. சாப்பாடோ சரக்கோ வங்கிக் கொடுத்தால் நம்மையும் கூல் செய்வதைப்போல, ''நீங்களும் ஒரு சே தான் நண்பா!" என்று தடாலடியாக சொல்வான். ''சே வை ஏன் நண்பா காரா சேவு மேட்டருக்கெல்லாம் இழுக்குறீங்க.. உங்களுக்கு உண்மையிலே சே பிடிக்கும்னா முத்துக்குமரனுக்கு வீர வணக்கம் செய்ய ஏதாவது பண்ணுங்க! இல்லைனா கள்ள‌த் தோணி ஏறி வன்னிக்காட்டுக்கு போங்க! பொலிவியா காடும், வன்னிக்காடும் இப்போ ஒண்ணுதான்" என்பேன். ''அடங்கொக்கமக்கா பின்னுறீங்க நண்பா! நீங்களும் ஒரு க்ம்யூனிஸ்ட்தான்" என்பான் ஒருவித ஆற்றாமையால். ஒரு அசாதாரணமான சந்தர்ப்பத்தில்
''தயவு செஞ்சு நீ சே வை முழுசா படிச்சுட்டு எனக்கு பாடம் எடுடா மொக்க!" என்று கோபத்தோடு கண்கள் சிவக்க நான் பேசியதைக் கேட்டு பொறி கலங்கிப் போய் இந்தப்பேச்சுகளுக்கு சமீபகாலமாக முற்றுப்புள்ளி வைத்து விட்டான். முற்றுப்புள்ளியா.. கமாவா என்பது இனிமேல்தான் தெரியும். இபோதெல்லாம் சே வைப் பற்றி என்னிடம் அவன் கதைப்பதில்லை. அவன் பார்வையில் நான் பெருந்தனக்காரனாக, முதலாளி வர்க்க பிரதிநிதியாக இப்போது நான் தெரிவதில்லையா அல்லது பாவம் போதும் என்று விட்டுவிட்டானா என்று தெரியவில்லை!
சமீபத்தில் என் சொந்த ஊர் ராமநாதபுரத்துக்கு போயிருந்தேன். நடந்தே ஊரின் நான்கு எல்லையையும் தொட்டுவிடலாம் என்கிற அளவில் இருக்கும் இந்த ஊரில் பைக்கில் ஊர்சுற்றுவது என்பது எனக்கு பிடித்தமான விஷயம்! அங்கு ஒரு மட்ட மத்தியான வேளையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு என் பைக்கை இடைமறித்தார் ஒரு குவார்ட்டர் வாலா.''மிஸ்டர்.. உங்க பேர் என்னனு தெரியாது. நான் கொஞ்சம் ஆல்கஹால் எடுத்திருக்கேன். ஆனா பரவால்ல.. கையை முதல்ல கொடுங்க! ஏன்னா நீங்க என் தானைத் தலைவனோட டீ‍‍‍‍ஷர்ட் போட்டிருக்கீங்க" என்று புறங்கையில் முத்தமிட்டார். ''ரொம்ப நன்றி தோழர்!" என்றதும் அவர் கண்களில் குபுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.
''தோழர்ங்கிற வார்த்தையைக் கேட்டு எத்தனை நாளாச்சு. பெருமையா இருக்கு... டீஷர்ட்டுக்கு மட்டும் கிடையாது. என்னை தோழர்னு கூப்பிட்டதுக்கும் சேர்த்து ஒரு உம்மா!" என்று இன்னொரு 'பச்சக்' கொடுத்துவிட்டு நடையைக் கட்டியவர் எட்ட‌டி தூரத்தில் குப்புற விழுந்தார். நல்லவேளை தோழருக்கு மீசையில்லை!
குடிப்பதும் குடிக்காமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சம்மந்தப்பட்டது. அவ்வளவு ஏன் அடிப்படை உரிமை சம்மந்தப்பட்டதும்கூட! சே குவேராவின் பெயரைச் சொல்லி போதையில் தள்ளாடி தன்னிலை மறந்து நடுவீதியில் தோழர் விழுந்ததைப் பார்த்தபோது தவறாக டியூன் செய்யப்பட்ட என் நண்பன் காரா சேகுவேராவின் ஞாபகம் வந்தது!
தயவு செஞ்சு சே குவேராவை முழுசா படிங்கடா!

Read more...

தமிழ்ல எழுத இங்கே தட்டுங்க!

ரெயின்போ காலனி ரூட்டு...

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes

  © Free Blogger Templates Autumn Leaves by Ourblogtemplates.com 2008

Back to TOP