சனி, 5 பிப்ரவரி, 2011

தமிழர் சமயத்தின் நீட்சியே இஸ்லாம்!

சமயம்... நன்னெறிகளோடு மக்கள் வாழ நல்வழி காட்டுபவைகளே சமயங்கள் ஆகும். சமைத்தல் என்பதற்கு உண்பதற்கேற்றவாறு உணவுப் பொருட்களைப் பக்குவப்படுத்துதல் என்பது பொருளாகும். சமயம் என்பதும் மனித மனத்தை எந்த மூடாக்குகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் பக்குவப்படுத்தி வைக்க உருவானதுதான். அனைத்து சமயங்களும் பொதுமையான கொள்கைகளைக் கொண்டவையாகும். சர்வதேச சட்டங்களும் இதை மையமாக வைத்தே உருவாகி இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இஸ்லாம் என்ற அந்த மதம் உன்மத்தம் அன்று மிக உன்னதமானதும் இந்த பொதுமைக் கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் சொன்ன நவீன மார்க்கமும் ஆகும். இத்தகு சிறப்பு வாய்ந்த இஸ்லாம் என்ற மதம் தமிழர் சமயத்தின் நீட்சி என்பதே இக்கட்டுரையின் நோக்கம். தொல்தமிழரின் சமய மெய்யியல் கொள்கைகளும், தமிழரின் வழக்குகளும் வழக்காறுகளும் எவ்வாறு இஸ்லாமோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கமாகவும் தமிழ் மொழியின் தாக்கங்கள் உலக மொழிகளிலும் குறிப்பாக சமய இலக்கியங்களிலும் எந்த அளவில் ஊடுருவியுள்ளனவென்பதை இக்கட்டுரை விளக்குகிறது. தனிமனிதனைக் கடந்து உணர்த்தி நிற்கும் அண்டத்தை அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே சமயம் ஆகும். 'ச‌மயம்' என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கருதுகோள். எல்லாத் தமிழரும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். .  
ஆதிச் சமூகம்.. தமிழ்ச் சமூகம்:
உலகில் தோன்றிய முதல் இனம் தமிழனமே என்றும், அவ்வினம் வெள்ளத்தால் அழிந்துபட்ட குமரிக் கண்டத்தில் என்றும் அறியப்படுகின்றது. அம்முதல் இனம் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கென்றே ஒரு சமயமும் மெய்யியல் கோட்பாடுகளும் வளர்ந்தன. அச்சமயத்தின் பெயர் அறியப்படவில்லையாயினும் அதனை தமிழ்ச்சமயம் அல்லது தமிழர்சமயம் என அழைப்பதில் தவறில்லை எனலாம்.
குமரி நாட்டுக் கொள்கை:

ஒருவரது வரலாற்றை அவர் உண்மையாகப் பிறந்த காலத்தினின்றும் இடத்தினின்றும் தொடங்கல் வேண்டும். அஃதன்றி வேறொரு காலத்திலும், வேறொரு நாட்டிலும் பிறக்காதவராகக் கொள்ளின், அவ்வரலாறு உண்மையானதாக இருக்க இயலாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிய குமரி நாடே! ஏழ்குணகாரை நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குறும்பனை நாடு, ஏழ்குன்ற நாடு என 49 உட்பிரிவுகளாகவும், குமரிக் கொல்லம் என்ற மலைநாட்டையும் சேர்த்து 50 குறுநிலப்பகுதிகளாக குமரிக் கண்டம் விளங்கியது. உலகின் மொழியியல் சமய, சமூக, நாகரிக வரலாறுகளைக் குமரிக் கண்டத்திலிருந்து தொடங்காதவரை தமிழ்ச்சமூகத்தின் வரலாறு முழுமை பெறாது. இப்பெரும் நிலப்பரப்பை பாண்டிய மன்னர் கட்டி ஆண்டனர். கடல்கோளுக்கு முன்னும் பின்னும் ஆண்டிருந்த பாண்டிய மன்னர்கள் பற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. மூன்று ஊழிகள் குமரிக் கண்டத்தை அழித்ததாகச்சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு ஊழியின் போதும், முதல் இடை என்றவாறு தமிழ்க்கழகங்கள் செயல்பட்டுவந்ததாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. அகத்தியனும், இறையனாரும், முருகனும், முரஞ்சியூர் முடி நாகராயிரும், நதியின் கிழவனும் உள்ளிட்ட நான்காயிரத்து நானூற்று நாப்பத்தி ஒன்பது புலவர்கள் முதல் கழகத்தில் பணியாற்றிவர்கள். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை உள்ளிட்ட பல இலக்கியங்கள் ஆங்கே படைக்கப்பட்டன. காய்சின வழுதிப் பாண்டியன் முதல் கடுங்கோன் வரை 89 மன்னர்கள் வரை ஆண்டிருந்தனர். குமரிக் கண்டம் முற்றிலும் அழிந்துபோன காலத்தில் வாழ்ந்திருந்த மன்னரின் பெயர் தெளிவாக இல்லை. கி.மு 20000 ஆண்டுகளில் குமரிக் கண்டம் என்ற நிலப்பரப்பில் வாழ்ந்திருந்தபோது நகரிய நாகரிகத்தில் வாழ்ந்திருந்தனர். அதற்குச்சான்றாகவே இன்றைய பூம்புகார் நகருக்கு கிழக்கேயுள்ள கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வால் அறியப்படுகிறது. உலக இலக்கியங்களில் திணை இலக்கியம் என்பது தமிழுக்கே உரியது. மனிதனையும் கடவுளையும் உயர்திணையாக தமிழர்கள் மட்டுமே கருதினர். மற்ற அனைத்தும் அஃறிணையாக கருதப்பட்டது. மேலும் கவின் கலை, இசை, வானியல், கணிதவியல் போன்ற முதிர்ந்த நிலைகளை குமரிக் கண்டத் தமிழன் கொண்டிருந்தான்.
இலக்கியத் தடயங்கள்:
'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள' என சிலப்பதிகாரம் சொல்கிறது. இவ்வெள்ளச்செய்தியை கனானிய, உகாரிய, எகிப்திய இலக்கியங்களும் உறுதிப்படுகித்துகின்றன. அவாய்(HAWAAI ) தீவின் இவ்வுலகம் வெள்ளத்தால் அழிந்த கதையை தம் மொழியில்(Kai-a-ka-hina-lil) ( sea that made the cheifs fall down) என்றும், ஓசரிஸ்(OSARIS )என்ற மன்னர் கடலில் மூழ்கி இறந்ததையும் அவனது மகனான ஓரஸ் (HORUS)என்பவனும் கடலில் மூழ்கியதை எகிப்திய ஆதி இலக்கியங்களில் காணலாம். மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் ஏறக்குறைய எல்லா சமயங்களும் எடுத்துரைக்கின்றன. ஒரே செய்தியை எவ்வாறு உலக இலக்கியங்கள் ஒரே நோக்கில் கூறுகின்றன என்பதை ஆய்வு செய்யும்போது இச்செய்திகளோடு தொடர்புகளுடைய மக்கள் தொடக்கக் காலத்தில் ஓரினமாகவோ அல்லது ஓரினத்தின் வழிவந்தவர்களாகவோ இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.



தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய சிந்தனைகள்:
‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்! என்கிற நபிமொழிக்கு ஒப்பாக
‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் இறைவனைப் பற்றிக் கூறியதைக் காணலாம்.
திருக்குர்-ஆனில் 'அவரே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ் நீரின்மீது இருந்தது.' என்று உலகம் படைக்கப்பட்டவிதத்தை விளக்குகிறது.
உந்துவளி கிளர்ந்த வூழூ மூழியும்
செந்தீச்சுடரிய வூழியும் பனியோடு
தண்பெய றலைஇய வூழிவு மவையிற்
றுணமுறை வெள்ள மூழ்கி யார்தருபு
மீண்டும் பீடுயிர் பீண்டி யவற்றிற்கும்
உள்ளீடாகிய விரு நிலத் தூழியும்' என்கிறது பரிபாடல். எனவே படைப்புத் தொழில் பற்றிய கருத்து, தமிழில் சொல்லப்பட்டு தமிழர் குடியேறிய நாடுகளிலும் சிற்சில மாற்றங்களுடன் சொல்லப்பட்டன என்ற உண்மை, மேற்கண்ட செய்திகளால் உறுதிப்படுகிறது.
ஏகத்துவ அரசியல் நோக்கில் இஸ்லாம்:
இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக. அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) என்பதாக பல நிலைகளில் இது அறியப்படுகிறது. இந்த ஏகத்துவக் கொள்கை, புராதான இந்திய சமூகத்தின் கி.மு.7 முதல் 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வேத, உபநிடத காலங்களில் இயற்கை கடவுள்வணக்கம் தாண்டிய மற்றொரு நிலையில் ஓரிறை தத்துவமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இறையின் அவதாரமா, தூதரா - உருவமா, அருவமா என்பதான எல்லை தாண்டி இது செயல்படுகிறது.
ரிக், யசூர், சாம அதர்வண வேதங்களில் ஏக இறை குறித்த கருத்தாக்கங்கள் இடம் பெற்றுள்ளன. உபநிடதங்களின் சில சுலோகங்கள் கீழ்கண்டவாறு உள்ளன. அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை (ஏகம் ஏவம் அத்விதயம்) அவனுக்கு பெற்றோர்களும் இல்லை. பாதுகாவலரும் இல்லை (நா கஸ்ய கஸ்சிச் ஜனித நா கதிபத்) அவனுக்கு நிகராக எதுவுமில்லை. (நா தஸ்தி பிரதிம அஸ்தி)
கி.பி. 2ம் நூற்றாண்டிலேயே வானுறையும் தெய்வம் / இவ்வுலகு இயற்றினான் / ஆதிபகவன் / மெய்ப்பொருள் - என்பதான ஏகச் சிந்தனையை கடவுள் கோட்பாடாக வள்ளுவம் கூறுவதையும் சொல்லலாம்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பாரசீகத்தின் ஜெராஷ்ட்ரிய மதமும் 'ஆஹுராமஷ்டா' எனும் அறிவில் மிகைத்த கடவுள் பற்றி குறிப்பிடுகிறது. பார்சிகளின் புனித நூலான 'தசாதிர்' இறைவனை ஆதியும் அந்தமும் இல்லாதவன், வடிவமோ அமைப்போ இல்லாதவன், அவன் ஒருவன், அவனைப்போல எவருமில்லை என்பதாக குறிப்பிடுகிறது. இம்மத கோட்பாடுகளெல்லாம் நபிமுகமது இஸ்லாத்தை வடிவமைப்பதற்கு முற்பட்ட காலத்தின் தத்துவக் குரல்களாகும்.
நபிமுகமதுவிற்கு முன்பே கஃபாவில் அரபு பழங்குடிகள் லாத், உஜ்ஜா, மனாத், ஹுபல் என பல பெண் கடவுள் சிலைகளை வணங்கி வந்துள்ளனர். இவற்றினூடே உயர்ந்த வகைப்பட்ட தந்தைக் கடவுளாக அல்லா என்ற சந்திரக் கடவுளையும் வணங்கி வந்துள்ளனர். இளம்பிறை முஸ்லிம்களின் அடையாளமாதற்கு இதுவே காரணமாகும். யூதர், கிறிஸ்தவர், பகாயிகள், தங்களின் சந்தோசம், துயரத்தின் குறியீடாக 'யா அல்லா' என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார்கள். நபிமுகமதுவின் தந்தையின் பெயர் கூட அப்துல்லா என்பதாகும். இதில் கூட 'அல்லா' என்ற சொல் இணைந்துள்ளது. அக்கால கட்டத்தில் ஏமன் மக்கள் வணங்கிய தெய்வத்திற்கு அர்ரகுமான் என்று பெயர். ரகுமானா என்ற யூத மொழிச் சொல்லின் வடிவமான யூதர்களை ஒன்று திரட்ட பயன்பட்ட அர்ரகுமான் சொல் அல்லாவின் பெயருக்கு மாற்றாக திருக்குர்ஆனின் முதல் ஐம்பது சூராக்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 இஸ்லாத்தின் முக்கிய கடமையென வலியுறுத்தப்பட்டு உலக முஸ்லிம்களால் நாளொன்றுக்கு ஐந்து நேரம் என வரையறுக்கப்பட்ட இறைவனை வணங்கும் தொழுகை முறையானது நபி முகமதுவின் வழிமுறையாக பின்பற்றப்படுகிறது. நபிமுகமதுவின் காலகட்டத்திற்கு முன்பே சிரியாவில் வாழ்ந்த சாபியீன்கள் என்னும் மக்கள் சமய சடங்காக ஒரு நாளைக்கு ஏழு தடவை தொழுகை நடத்தியவர்கள் ஆகும. இஸ்லாத்தில் அவர்கள் பின்பற்றிய ஐந்து நேர தொழுகையின் அதேகாலம் உள்வாங்கப்பட்டுள்ளது. மேலும் மிகப்பழமை வாய்ந்த இந்திய வகைப்பட்ட, வைதீக சாதீய மரபுகளுக்கு மாற்றான யோக மரபின் கூறுகளோடு தொழுகையின் அம்சங்கள் ஒத்திருப்பதை கவனிக்கலாம். பதஞ்சலியின் யோக சூத்திரத்திற்கு கி.பி.4ம் நூற்றாண்டிலேயே வியாச பாஷ்யம் விரிவுரையை வியாசர் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழுகையின் அமைப்பு முறையில் இடம் பெறும் காட்சிநிலைகள் இகாமத் சொன்னவுடன் நிற்கும் நிலை சமஸ்திதி, அல்லாஹு அக்பர் சொல்லி தக்பீர் கட்ட கையை உயர்த்துதல் கர்ண சக்தி விகாஸகா, ருகூவுக்கு செல்லும் குனிந்தநிலை ஸமன்சித்தி விகாஸகா ஸமியல்லஹுலிமன்ஹமீதா என நிமிரும் நிலை சக்ரவாகாசனம், பூமியில் நெற்றிபட சுஜுது செய்யும் நிலை அர்த்த சிரசாசனம், அமர் நிலையில் பூமி தொடும் நிலை வஜ்ராசனம், தலையை திருப்பி ஸலாம் கொடுத்தல். அர்த்த மத்ஸ யேந்திராசனம் என்பதாக யோக, தியான மரபின் கூறுகளோடு தொழுகை பின்னிப் பிணைந்திருப்பதையும் கவனத்திற்கொள்ளலாம்.
கலாச்சார ஒற்றுமைகள்:
பழந்தமிழ் சமூகப் பழக்கங்களில் ஒன்றான திருமணத்தின்போது மணமகளுக்கு மணமகன் பரிசப்பணம் வழங்குதல் எனும் நிகழ்வு இஸ்லாத்தில், மணமகன், மணமகளுக்கு மஹர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதோடு ஒத்துப்போவதையும் கவனிக்கலாம்.
அரேபிய முற்காலச் சூழலில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்துள்ளது. கதிஜாநாயகி தனியாக முதலீடு செய்த வர்த்தக தொழிலில்தான் நபித்துவம் பெறுவதற்கு முன்பே நபி முகமது ஈடுபட்டிருந்தார்கள் என்கிற செய்தியும் கவனத்திற்குரியது.
இஸ்லாத்தை காலத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு நபி முகமது வடிவமைத்தது நிகழ்ந்துள்ளது. இதில் வகாபிகள் பேசும் தூய்மைவாதத்திற்கு இடம் எதுவுமில்லை. முன்பிருந்த சமய சமூக பழக்கங்களின் வளர்முகத் தன்மை கொண்ட சாரம்சத்தை சூழலுக்கேற்றவாறு இஸ்லாம் உள்வாங்கிக் கொண்டது என்பதே இவைகூறும் ஆழமான செய்திகளாகும். 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்று சொன்ன திருவ‌ள்ளுவரின் விருந்தோம்பல் கோட்பாடு இஸ்லாமியர்களின் தனித்த‌ அடையாள சிறப்புகளில் ஒன்று!

மானுடவியல் ஆதாரங்கள்:
வரலாற்று பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.3ம் நூற்றாண்டிலேயே அரேபியாவிற்கு வடக்கே ரோமானிய பேரரசும், கிறிஸ்தவமும், வடகிழக்கே பாரசீகப் பேரரசும் யூத மதமும் அதிகாரத்தில் நிலை பெற்றிருந்ததை காணலாம். இப்ராஹிம் நபியும் அவர்தம் மகன் இஸ்மாயீல் நபியும் புதுப்பிக்கக் கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம். நபி முகமதுவுக்கு முற்பட்ட காலத்திலும் நாயக வாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது. குறைஷு', ஹுதைல், சிமிட்டிக் உள்ளிட்ட இன மக்கள் ஹோபல். லாத், உஜ்ஜா, மனாத் உள்ளிட்ட முன்னூற்றி அறுபதுக்கும் மேற்பட்ட தெய்வச் சிலைகளை கஃபத்துல்லாவில் வணங்கி வந்தனர். நபி முகமதுவால்தான் இத்தகு புற மத அடையாளங்கள் நீக்கப்பட்டு கஃபா இஸ்லாமியப் பண்பாட்டு அடையாளமாக நிலைபெறுகிறது.
இஸ்லாத்தின் இறுதிக் கடமையை ஹஜ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றுதலாக உள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் இஹ்ராம் என்னும் வெள்ளாடை தரித்தலும் மக்காவின் எல்லைப் புறமான மினாவில் தங்கி அங்கு ஷைத்தானை கல்லெறிவதும், கஃபாவைச் சுற்றி ஏழுமுறை வலம் வந்து இரண்டு ரக்அத்து தொழுவதும், அங்குள்ள உஹறஸ்ருல் அஸ்வத் பளிங்கு கல்லை முத்தமிடுவதும், சபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும், இறுதி நிகழ்வாக பலியிடுதலான குர்பான் கொடுப்பதும், அரேபிய கலாச்சார சூழல் சார்ந்து, திருக்குர்ஆன் அங்கீகரித்த நபிகள் நாயகத்தின் நடைமுறைகளாகும். இந்துக்கள் கோவில்களில் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள், முஸ்லிம்களோ தர்காக்களில் படுக்கப்போட்டு கும்பிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுவதைப்போல கஃபாவை சுற்றி வலம் வருவதை கோயிலை சுற்றி வலம் வருவதாகவும், ஹஸ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை கறுப்பு நிற கல்லை வணங்குவதாகவும், முடி களைவதை கோயில் கடமை முடித்துவிட்டு மொட்டை போடுவதாகவும் அர்த்தப்படுத்திப் பார்க்க சாத்தியமுள்ளதாக மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே தான் தர்கா நிகழ்வுகளையோ, ஹஜ்ஜின் அமல்களையோ மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ இல்லாமல் வரலாற்று சூழல், வடிவம், உள்ளடக்கம் சார்ந்தும் அணுக வேண்டியுள்ளது.
இஸ்லாத்திற்கு முற்பட்ட காலங்களில் அரேபிய நாடுகளில் ஆசியப் பிரதேசங்களில் மட்டுமல்ல உலகமெங்கும் பழங்குடி சமுதாய மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக கடவுளுக்காக பலியிடுதல் என்கிற வழக்கம் உள்ளது. வேதகாலப்பழக்கமும் நடைமுறையும் இது. சமண புத்த மதங்களின் உருவாக்கத்தின்போது கால்நடைகளை தெய்வத்திற்கு பலியிடுதல் தடுக்கப்பட்டது. இதற்கான சமூகக் காரணம் வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு மாறியதுதான். புராத‌ன விவசாய சமூகத்தில் கால்நடைகள் பங்களிப்பு மிக தேவையாயிருந்தது. எனவே அது அம்மத நம்பிக்கைகளில் தடை செய்யப்பட்டிருந்தது. எந்திரமயமாக்கப்பட்ட தொழிலுற்பத்தி சமுதாயத்தில் விவசாய உற்பத்தி கூட கால்நடைகளின் தேவை குறைந்து விட்டது. இக்காலத்தில் வைதீக இந்து மதம் பசுவதைதடை என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட, தலித்திய மற்றும் சிறுபான்மையின மக்களின் உணவுப்பழக்கத்தில் கை வைக்கப்பார்க்கிறது சைவம் உயர்ந்தது. அசைவம் தாழ்ந்தது என்ற பிராமய கருத்தாடலை திரும்பவும் உயிர்ப்பிக்க முயல்கிறது.
இச்சூழலில் இஸ்லாம் கூறும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் ஆட்டையோ ஒட்டகத்தையோ பலியிடுதல் (குர்பான் கொடுத்தல்) இபுராகீம் நபீ அவர்தம் மகனார் இஸ்மாயிலை இறையாணையின் படி பலிகொடுக்க முன் வந்ததையும் அவர்களது இறைபக்தியையும் இறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பாரம்பரியமான நடைமுறையாகும். இதன் வரலாற்று அர்த்தம் என்பதே மனிதப்பலி தடுக்கப்பட்டு விலங்கினப்பலி மாற்றாக முன்வைக்கப்பட்ட சம்பவமாகும். எனவே குர்பான் கொடுத்தலிலும் புற வடிவம் அகவடிவம் என்கிற இருநிலைகள் உள்ளன. இச்செயலின் புறவடிவ சில பகுதிகளைப் பார்த்தால், பிற சமய நடவடிக்கையான கிராமப்புற தெய்வங்களுக்கு ஆடு, மாடு பலியிடுதல் போலத் தோன்றும். எனவே குர்பான் கொடுக்கும் முறை நோக்கம் உள்ளிட்ட அகவடிவமும் மிக முக்கியமானதாகப் படுகிறது.

புவியியல் விழுமியங்கள்:
வடி(WADI) என்ற அரேபிய சொல்லுக்கு ஆறு என்று பொருள். வடி என்ற சொல்லும் திரிபுபடாத தமிழ்ச் சொல்லே! நகர்(NEHR), யாறு(YOR)என்ற பெயரில் ஆறுகள் இருக்கின்றன. இன்னும் தெளிவாக 'வடி அல் உருமா( WADI AL RUMMA) என்ற ஆறு, மெசபதோமியாவையும் 'வடி அல் சிறுகன்' (WADI AL SIRHAN) என்ற ஆறு சிரியாவையும் அரேபியாவுடன் இணைக்கின்றன.
 அரேபியாவின் 'யாமென்' என்ற வார்த்தையில்கூட 'யா' என்ற தமிழ்ச் சொல்லே முன்னெட்டாக உள்ளது‌  யா என்பதற்கு தெற்கு என்று பொருள். 'மண்' என்பது மணலை மட்டுமல்லாது இடத்தையும் குறிக்கும். தென்பகுதியில் கண்டறியப்பட்ட நாடு என்பதால் யாமென் ஆயிற்று. 'ஓமன்' என்ற நாட்டின் பெயர்கூட 'உவர் மண்' என்ற நெய்தல் நிலத்தை சார்ந்தே பயர் வைக்கப்பட்டிருக்கலாம். இன்றும் தென் தமிழக கிராமம் ஒன்றின் பெயர் உவரி என்று இருக்கிறது.  இங்கிருந்து போன முத்துக்களின் அழகில் சொக்கிப் போய் சாலமன் (சுலைமான்) மன்னன் அகாபா வளைகுடா பகுதியில் உள்ள துறைமுக நகருக்கு உவரி என்றே பெயரிட்டு இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. இது போல கால்தீயா (கல்தேயம்), பெர்ஷியா(பார்த்தீயா), எலம் (ஈழம்), எரிதிரை (சிவப்புக் கடல்- எரித்ரேனியன் கடல் ) என இந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. இதன் மூலமாக  அரேபிய கண்டம் என்பது குமரிக் கண்டத்தின் நீட்சி என அளவிடலாம். அங்கிருக்கும் மலைகளும் ஆறுகளும் தொன்மக்கதைகளும் தமிழ் மூலத்தைக் கொண்டுள்ளன என்பதை சொல்லாய்வுகள் வாயிலாக புரிந்து கொள்ளலாம். அவ்வளவு ஏன்..அரேபியாவில் குடியேறிய முதல் குழுவின் தலைவர் என்று 'ஆத்'(AADH) என்பவரை திருக்குர்ஆன் சொல்கிறது. அதுவும்கூட ஆதி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே என்றும் கணக்கிட்டுக் கொள்ளலாம். 'ஆதி' என்ற தமிழ்ச் சொல்லே முதன்மையானவன் என்பதை விளக்கும்.
முடிவுரை:
புவியியலாளரின் கருத்துப்படி கி.மு 12000 -10000 ஆண்டுகளில் குமரிக் கண்டத்துத் தமிழர்கள் மேலைநாடுகள் நோக்கிப் புலம் பெயர்ந்தனர் எனக் கொள்ளலாம். கிமு 4000 35000 ஆண்டுகளில் பாரசீக வளைகுடா வழியில் படையெடுத்துச் சென்று பாபிலோனை வெற்றி கொண்டு அங்கு மிகச் சிறந்த நகரிய நாகரிகத்தை ஏற்படுத்தியவர்கள் வரலாற்றில் சுமேரியர்கள் என்று அழைக்கபடுகின்றனர். சுமேரியர்கள் தமிழர்களே என்பதற்கான பல்வேறு சான்றுகளும் மேலை இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. 'சமர்' என்ற தமிழ்ச் சொல்லுக்குப் போர் என்பதே பொருளாகும் சமரியர் தான் பின்னாளில் சுமேரியர் எனப்பட்டனர். கி.மு3000 முதல் 2500 ஆண்டுகளில் குடியேறிய எபிரேய மக்கள், சிந்துவெளித் தமிழர்களே என்பதற்கான சான்றுகளும் மேலை இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன‌. தமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறையை, சிந்தனைகளை, நடைமுறைப் போக்குகளை, வரலாற்றை தமிழர் சமயம் என்ற இக்கட்டுரை விளக்க முயலும்   
 
மேற்கோள்கள்:
முஸ்லிம்களும் தமிழகமும் - டாக்டர் எஸ்.எம்.கமால்
தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு - A.K. ரிபாயி
கல்வெட்டு காலாண்டிதழ்
இஸ்லாமிய கலைக் களஞ்சியம் - எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம்
பண்பாட்டை அணுகும் புதிய பார்வை - தொ.பரமசிவன்
தமிழர் சமயம்‍- கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா
திண்ணை.காம்
இஸ்லாம் தமிழர் சமயம்‍- ம.சோ.விக்டர்

கருத்துகள் இல்லை: