ஜே.கே.ரித்தீஷின் தசாவதாரம்
''வீரத் தளபதி ஜே.கே.ரித்தீஷின் 'தசாவதாரம்'... எப்பிடி இருக்கு டைட்டில். வொர்க்-அவுட் பண்ணிருவோமா..?'' விஷயத்தைச் சொன்னதும் வீரபாண்டித் திருவிழாவுக்கு வந்த வெள்ளைக்காரர் மாதிரி குஷியானார் ராஜசேகரன். யானை, கடல், ரயில், ஜே.கே.ரித்தீஷ்... இதெல்லாம் யாருக்குத்தான் பிடிக்காது! ''ஆத்தி... நம்ம கதை இலாகாவைவிட ஃபாஸ்ட்டா இருக்கீங்களே. ஆமா... கமல் அண்ணே எதாவது கோச்சுக்குவாப்லயா... அட, அவருக்கும் இது கிரெடிட்தானே!'' - உடனே கால்ஷீட் தட்டி, கலர் பலூன் கட்டினார் ரித்தீஷ். கொஞ்ச நேரத்தில் அவரே லைனுக்கு வந்து, ''கமல் அண்ணனுக்கு மேக்-அப் போடுற வெள்ளக்காரரு நம்பர் இருக்காண்ணே... அந்தாளை அமெரிக்காலேருந்து வரச் சொல்லிருவோமா?'' என அசால்ட்டாக கேட்க, அலறினோம்.
மறுநாள்... நடமாடும் ஏ.டி.எம்மின் 'தசாவதார' மெகா ஜிகா ஜிங்கிலா ரவுண்ட்-அப்...
''முதல்ல வக்கீல் கெட்-அப். 'கௌரவம்' சிவாஜி கணக்கா கலக்குறேன் பாருங்க...'' என்றவர் தடதடவென மேக்கப்பி, ராயல் லாயராய் வந்து நின்றார்.

''டே... நாயகன்டா. நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடிவா!'' - குட்டீஸ்கள் குஷியாகி பாட்டுப் பாட, ''குழந்தையும் தெய்வமும் ஒண்ணு. அண்ணே நாம ரீச் ஆயிட்டம்ணே. டேய்... 5,000 ரூவாய்க்கு சாக்லேட் வாங்கி இவங்களுக்குக் கொடுங்கடா...'' என அதகள ஆர்டர் போட்டார்.
அடுத்து ஆட்டோ டிரைவர். 'பாட்ஷா' ரஜினியாகி, கே.கே.நகர் 'ஜே.கே.ரித்தீஷ் ஆட்டோ ஸ்டாண்டில்' போய் இறங்க ஃபுல் ஜாலியானார்கள் ஆட்டோ டிரைவர்கள். ''அட ரித்தீஷண்ணே... இன்னிக்கு மீட்டருக்கு மேலே ச்ச்ச்ச்ச்சூடுதான்...'' - ஆட்டோக்களில் 'இருந்தாக்கா அள்ளிக் கொடு... இல்லைனா சொல்லிக் கொடு!' என 'நாயகன்' பாடலை ஓடவிட்டு விசுவாசத்தை வீசினார்கள். ''கோயம்பேட்டுக்கு ஆட்டோ வருமா?'' என்றபடி ஒரு தம்பதி என்ட்ரி ஆனது. ''நான் யார் தெரியுமா?'' என்று ஸ்டைலாகக் கேட்ட ரித்தீஷிடம், ''ஹே.. ரித்தீஷ் சார்...'' அவர்கள் காட்டிய ஆச்சர்யத்துக்கு ஆளுக்கு 1,000 ரூபாய்!

அடுத்த அவதாரமாய் டிராஃபிக் இன்ஸ்பெக்டராகி நின்றார். அந்தப் பக்கமாய் போன ஒரு சார்ஜென்ட்டை மடக்கி பைக்கை வாங்கியவர், அரை வட்டமடித்து சர்க்கஸ் காட்டினார். ''நான் வெடிச்சா ஆர்.டி.எக்ஸ் பாம், அடிச்சா டிராஃபிக் ஜாம்'' என பாவா அடுத்த பன்ச்சை ரெடி பண்ணித் தர, செம ரகளை.

அடுத்து காருக்குள்ளேயே சுறுசுறு மேக்-அப். பொளக்கும் சிவப்பு சட்டை, கிளப்பும் கறுப்பு வேட்டியில் கட்சிக் கலர் தந்தார் ரித்தீஷ். ''மக்கள் பணிதான் நமக்கு முதல்ல... தலைவர் மனசு வெச்சா, வர்ற எலெக்ஷன்ல எம்.பிண்ணே!'' என்றவர் மீனவ கெட்டப்பில் பீச்சில் புகுந்தார். மீனவர்களோடு ஐக்கியமாகி ஜாலி பண்ணியவர், 20 கிலோ மீனை தூக்கிக்கொண்டு எகிறல் போஸ் கொடுத்து ராஜசேகரன் கண்ணைக் குத்தினார்.

''டே, அவரு சிக்ஸர் அடிக்குற மாதிரி ஸ்லோவா போடு. அப்பத்தான் டொனேஷன் தருவாரு...''- பசங்களின் ஓப்பன் காமென்ட்டுகளைக் கேட்டு ஜாலியானவர் 5 பந்துகளை பவுண்டரிக்குப் பறக்கவிட்டு, கடைசி பாலில் க்ளீன் போல்டானார். தன்னை அவுட்டாக்கிய பையனை அழைத்து 500 ரூபாயைத் தந்தவர், டோர்னமென்ட்டுக்கு 5,000 ரூபாய் அன்பளித்தார். மொத்த பசங்க ளும் கோரஸாய் சொன்னார்கள், ''வாரா வாரம் வந்துருங்கண்ணே..!''
நாயகனின் கடைசி கெட்டப்... தள்ளுவண்டி இட்லி வியாபாரி. நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை, பூப்போட்ட கைலி என ரெடியான ரித்தீஷ், ஒரு தள்ளுவண்டியை கையகப்படுத்தினார். பிளாட்ஃபார்ம் பார்ட்டிகளுக்கு ஆவி பறக்கும் இட்லி இலவசமாய் தர, கூட்டம் கும்மியது. என்னவோ, ஏதோவென 'போலீஸ் பேட்ரோல்' பதறி வர, 'வாளமீன்' தண்டாயுதபாணி எஃபெக்ட்டில் ரித்தீஷ் கையைக் காட்டி வழியனுப்பிவைத்தார். ஆளாளுக்கு ரவுண்ட் கட்டிச் சாப்பிட்டு, காசு கொடுக்காமல் போக, கடை அம்மணி முகத்தில் கலவரம். 3,000 ரூபாயை எடுத்து நீட்ட, கலவரம் பரவசமானது. ''நம்ம அடுத்த படத்துக்கு 'வேட்டைக்காரன்'னு டைட்டில் பிடிச்சோம். பார்த்தா அதை விஜய் வெச்சுட்டாப்ல. 'பாயும் புலி'ன்னு வைக்கலாம்னா, ஏ.வி.எம்ல அந்த டைட்டிலைக் குடுக்கலை. விடுவோமா நாங்க? ரெண்டையும் மிக்ஸ் பண்ணி 'வேட்டைப் புலி'ன்னு வெச்சுட்டோம்ல! இப்போ உங்களோட வந்தப்போ கிடைச்ச ரெஸ்பான்ஸைப் பார்த்தா, அதுல இருபது கெட்-அப் போட்றலாம் போல இருக்குண்ணே. ஒரு பன்ச் கேளுங்க... 'உள்ளத்தால பாசக்கிளி, உறுமினா வேட்டைப் புலிடா...'' - படுபயங்கர திட்டத்தைச் சிரித்தபடி ரித்தீஷ் சொல்ல, ''நாளைய இந்தியா ரித்தீஷ் வாழ்க வாழ்க..!'' எனத் திடீர் குரல்கள்!
பின்குறிப்பு- இந்த பேட்டிக்காக நானும் புகைப்படக்காரர் ராஜசேகரன் அவர்களும் சல்லிக்காசுகூட வாங்கவில்லை என்பதை கொஞ்சம் பெருமிதத்தோடும் நிறைய வருத்தத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன்!
1 கருத்து:
// தமிழ்மொழி வளர்கிறாள்... //
என் மகளுக்கு நான் வைக்க நினைத்த அழகுபெயர். உங்கள் மகளுக்கு என் வாழ்த்துகள்.
கருத்துரையிடுக